இந்தியா

விடிய, விடிய பலத்த மழை- டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்

Published On 2023-07-26 07:01 GMT   |   Update On 2023-07-26 07:01 GMT
  • பலத்த மழை காரணமாக டெல்லியில் முக்கிய சாலைகளில் வெள்ளம் இடுப்பளவுக்கு இருந்தது.
  • டெல்லியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பல இடங்களில் நிவரண முகாம் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

புதுடெல்லி:

வடமாநிலங்களில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. தலைநகர் டெல்லியில் நேற்று இரவு முதல் தொடங்கிய மழை இன்று காலை வரை விடிய விடிய பெய்தது.

தொடர் மழை காரணமாக டெல்லியில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. டெல்லி புறநகர் பகுதியான நொய்டாவிலும் கடும் வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளது.

பலத்த மழை காரணமாக டெல்லியில் முக்கிய சாலைகளில் வெள்ளம் இடுப்பளவுக்கு இருந்தது. இதனால் வாகனங்கள் வெள்ளத்தில் மிதந்தபடி சென்றன. பெரும்பாலான இடங்களில் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

டெல்லியில் தொடர்ந்து மழை பெய்யும் என்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் யமுனை நதியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டு இருக்கிறது.

டெல்லியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பல இடங்களில் நிவரண முகாம் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

Tags:    

Similar News