இந்தியா

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ராகுல் காந்தி

ராகுல் காந்திக்கு எந்த பதவியும் தேவையில்லை: அவர் இயல்பான தலைவர்- காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

Published On 2022-09-23 22:15 GMT   |   Update On 2022-09-23 22:16 GMT
  • காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
  • வேட்பு மனு தாக்கல் செய்ய 30-ந் தேதி கடைசி நாளாகும்.

காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வேட்புமனு படிவங்கள், டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் கிடைக்கும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளது.

30-ந் தேதி மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும். அக்டோபர் 1-ந் தேதி, வேட்புமனு பரிசீலனை நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற அக்டோபர் 8-ந் தேதி கடைசிநாள். அன்று மாலை 5 மணிக்கு வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். அக்டோபர் 17-ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும். 19-ந் தேதி, ஓட்டுகள் எண்ணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் போட்டியிட ராகுல் காந்தி திட்டவட்டமாக மறுத்து விட்டதால், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் காங்கிரஸ் மூத்த எம்.பி. சசிதரூர் ஆகியோர் போட்டியிடுவார்கள் என தெரிகிறது. இந்த நிலையில், ராகுல் காந்தி இயல்பான தலைவர் என்றும், அவருக்கு எந்த பதவியும் தேவையில்லை என்றும் மேற்கு வங்க காங்கிரஸ் எம்.பி., ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

ராகுல்காந்தி போட்டியிட மறுத்து விட்ட நிலையில், காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெறுவதாகவும், இனிமேல் ராகுல்காந்தி குடும்பத்தை சிறுமைப்படுத்தும் முயற்சியை பாஜக நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

காங்கிரஸில் ஜனநாயகம் உள்ளது, அதனால் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது என்றும், ஆனால் பாஜகவில் தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்ததா என கேள்வி எழுப்பிய சவுத்ரி, அந்த கட்சியின் தலைவர் நாக்பூரில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டார் என குறிப்பிட்டார்.

Tags:    

Similar News