இந்தியா

ஆந்திராவில் அண்ணன் மகளை நடுரோட்டில் வெட்டி கொன்ற சித்தப்பா

Published On 2022-06-22 13:50 IST   |   Update On 2022-06-22 13:50:00 IST
  • விவசாய நிலத்தை போத்தமாவுக்கு பிரித்து தராமல் அவரது சித்தப்பா விவசாயம் செய்து வந்தார்.
  • போத்தம்மா மீது அவரது சித்தப்பா ஆத்திரத்தில் இருந்தார்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் பல்நாடு சத்தேமா பள்ளியை சேர்ந்தவர் போத்தம்மா (வயது 39). இவருக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வந்தார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.போத்தம்மாவின் பெற்றோர் ஏற்கனவே இறந்து விட்டனர். இவருடைய சித்தப்பா போத்தைய்யா. போத்தம்மா குடும்பத்திற்கும், அவரது சித்தப்பா குடும்பத்திற்கும் சேர்த்து 30 சென்ட் பூர்விக விவசாய நிலம் உள்ளது.

விவசாய நிலத்தை போத்தமாவுக்கு பிரித்து தராமல் அவரது சித்தப்பா விவசாயம் செய்து வந்தார். விவசாய நிலத்தை பங்கு பிரித்து தரும்படி தனது சித்தப்பாவிடம் போத்தம்மா அடிக்கடி வலியுறுத்தி வந்தார். இதனால் போத்தம்மா மீது அவரது சித்தப்பா ஆத்திரத்தில் இருந்தார்.

இந்த நிலையில் போத்தம்மா தனது பிறந்த ஊரில் இன்று நடைபெறும் உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார்.

திருமண மண்டபம் அருகே சாலையை ஒட்டிய இடத்தில் நிலம் பிரிப்பது சம்பந்தமாக இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த போத்தைய்யா தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து போத்தம்மாவை நடுரோட்டில் சரமாரியாக வெட்டினார். அவர் ஓட முயன்றார். அப்போது கால் இடறி கீழே விழுந்தார். ஆத்திரம் தீராத போத்தையா போத்தம்மாவை பயங்கரமாக வெட்டினார். அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் இந்த பதைபதைக்கும் காட்சியை கண்டு அதிர்ச்சியடைந்து போத்தம்மாவை மீட்க முயன்றனர். அவர்களை போத்தைய்யா வெட்டி விடுவதாக மிரட்டி விட்டு மீண்டும் போத்தமாவை வெட்டினார்.

அதற்குள் போத்தம்மா ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போத்தம்மாவை மீட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

போத்தமாவை போத்தையா சரமாரியாக வெட்டும் வீடியோ காட்சிகள் செல்போனில் பரவி வருகிறது.

இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News