இந்தியா

மகாராஷ்டிராவில் 4 நாளில் மந்திரி சபை விரிவாக்கம்: ஷிண்டே அணி தகவல்

Published On 2022-08-03 03:00 GMT   |   Update On 2022-08-03 03:00 GMT
  • ஷிண்டேவும், பட்னாவிசும் மட்டுமே அரசை நடத்தி வருகின்றனர்.
  • பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.

மும்பை

மகாராஷ்டிராவில் கடந்த ஜூன் மாதம் 30-ந்தேதி ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாகவும், தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்று கொண்டனர். பொறுப்பேற்று ஒரு மாதம் முடிந்தும் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படவில்லை. ஷிண்டேவும், பட்னாவிசும் மட்டுமே அரசை நடத்தி வருகின்றனர். இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமா்சித்து வருகின்றன.

குறிப்பாக மாநிலம் மழையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படாததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்தநிலையில் மகாராஷ்டிராவில் விரைவில் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படும் என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் புனேயில் நிருபர்களிடம் கூறுகையில், "விரைவில் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படும். மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படாத போதும், அரசு முழு திறனுடன் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் நலன் சார்ந்து பல்வேறு முடிவுகளை எடுத்து உள்ளோம். பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.

ஆரேகாலனியில் மெட்ரோ பணிமனை கட்ட அனுமதி வழங்கி உள்ளோம். மழை தண்ணீரை வறட்சி பாதித்த மரத்வாடா மண்டல பகுதிக்கு பயன்படுத்த திட்டமிட்டு உள்ளோம்." என்றார்.

இதற்கிடையே இன்னும் 4 நாட்களில் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படும் என்று ஏக்நாத் ஷிண்டே அணியின் செய்தி தொடர்பாளர் தீபக் கேசர்கர் கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் தெரிவிக்கையில், "மழைக்கால சட்டசபை கூட்டத் தொடரை எதிர்கொள்ளும் வகையில் மந்திரி சபையை விரிவாக்கம் செய்ய வேண்டியது உள்ளது. இன்னும் 4 நாளில் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படும். இதை கூட்டணி கட்சிகளின் மூத்த தலைவர்கள் என்னிடம் தெரிவித்தனர்" என்றார். மழைக்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 18-ந் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து திட்டமிட்டப்படி சட்டசபை கூட்டம் நடைபெறவில்லை. மந்திரி சபை விரிவாக்கத்தை தொடர்ந்து மழைக்கால கூட்டத் தொடர் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News