இந்தியா

பிகாரில் நம்பிக்கை வாக்கெடுப்பு: நிதிஷ் குமார் அரசு வெற்றி- பாஜக வெளிநடப்பு

Published On 2022-08-24 11:53 GMT   |   Update On 2022-08-24 11:54 GMT
  • நிதிஷ்குமார் அரசு மீது இன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
  • பாஜகவைச் சேர்ந்த சபாநாயகர் விஜய் குமார் சின்கா, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பு ராஜினாமா செய்தார்.

பாட்னா:

பீகாரில் ஐக்கிய ஜனதா தள தலைவரும் முதல்வருமான நிதிஷ் குமார் பா.ஜனதாவுடனான கூட்டணியை முறித்தார். முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார். பின்னர் அவர் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து மீண்டும் முதல்-மந்திரியாக பதவியேற்றார். ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் துணை முதல்-மந்திரியானார்.

இந்நிலையில் நிதிஷ்குமார் அரசு மீது இன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக பீகார் சட்டசபை இன்று காலை கூடியது. ஆனால் பீகார் சபாநாயகர் விஜய் குமார் சின்கா நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்தார். பா.ஜனதாவை சேர்ந்த அவர் பதவி விலகியதோடு அவையை 2 மணி வரை ஒத்திவைத்தார். இதன் காரணமாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவது தாமதமானது.

இந்நிலையில், பிற்பகல் மீண்டும் சட்டசபை கூடியது. அப்போது, முக்கிய எதிர்க்கட்சியான பாஜக, நம்பிக்கை தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்தது. அதன்பின்னர் நம்பிக்கை தீர்மானம் மீது முதல்வர் நிதிஷ்குமார் உரையாற்றி, உறுப்பினர்கள் ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து நம்பிக்கை தீர்மானம் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், நிதிஷ் குமார் தலைமையிலான மகாபந்தன் கூட்டணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News