இந்தியா

வாக்காளர் பட்டியல் திருத்த விவகாரம்: என் படத்தை 'டீ சர்ட்டில்' பயன்படுத்துவதற்கு பிரியங்கா காந்தி யார்?- பீகார் பெண் கடும் கோபம்

Published On 2025-08-13 16:04 IST   |   Update On 2025-08-13 16:04:00 IST
  • பீகாரில் உள்ள ஒரு பெண்மணியின் வயது 124 என வாக்காளர் அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
  • இதை ராகுல் காந்தி வெளிப்படுத்திய நிலையில், பிரியங்கா காந்தி அந்த பெண் படம் பொறிக்கப்பட்ட டி-சர்ட் அணிந்திருந்தார்.

காங்கிரஸ் எம்.பி.யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி சமீபத்தில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும்போது, கடந்த பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் 48 தொகுதிகளில் வாக்கு திருட்டு நடந்ததாக கூறினார். அதற்கான ஆதாரங்களையும் அவர் வெளியிட்டார்.

அப்போது அவர் வாக்காளர் பட்டியலில் இருந்த குளறுபடிகளையும் சுட்டிக் காட்டினார். எடுத்துக்காட்டாக பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு பிறகு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் மிந்தாதேவி என்ற பெண்ணுக்கு 124 வயது என்று பதிவு செய்யப்பட்டு இருப்பதை குறிப்பிட்டார்.

பீகார் வாக்காளர் பட்டியல் குளறுபடிகளை கண்டித்து கடந்த சில தினங்களாக பாராளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி கட்சியினர் தினமும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று போராட்டம் நடந்தபோது பிரியங்கா மற்றும் சில காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் டீ-சர்ட் அணிந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.

அவர்கள் அணிந்து இருந்த டி.சர்ட் முன் பகுதியில் மிந்தாதேவியின் புகைப்படமும் பின் பகுதியில் 124 நாட்அவுட் என்றும் பொறிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து மிந்தாதேவி பற்றிய தகவல்கள் நேற்று நாடு முழுவதும் பரவியது.

ஒரே நாளில் புகழ்பெற்ற மிந்தாதேவிக்கு 35 வயது ஆகிறது. இவர் பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் உள்ள பிரபுநாத் நகரில் வசித்து வருகிறார். வாக்காளர் பட்டியலில் தனது பெயர் 124 என்று தவறாக இருப்பதை 2 தினங்களுக்கு முன்பு சுட்டிக்காட்டி இருந்தார். இந்த நிலையில் தனது புகைப்படத்தை பயன்படுத்தி பிரியங்கா போராட்டம் நடத்தியதால் அவர் கடும் கோபம் அடைந்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

எனது புகைப்படத்தை டி.சர்ட்டில் பொறித்து அணிந்து கொள்வதற்கு பிரியங்கா காந்திக்கு என்ன உரிமை இருக்கிறது? அவர் யார்? அவர் என் சொந்தக்காரரா? எதற்காக அவர் என் அனுமதி இல்லாமல் என் புகைப்படத்தை பயன்படுத்த வேண்டும்?

அவரது இந்த செயலால் நான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன். நிறைய பிரச்சி–னைகளை சந்திப்பது போன்ற உணர்வு ஏற்பட்டு இருக்கிறது. எனது படத்தை பிரியங்கா அணிந்து இருப்பது போன்று பார்த்து விட்டு எனது நண்பர்கள், உறவினர்கள் தொடர்ந்து அழைத்து பேசியபடி உள்ளனர்.

என்னால் வெளியில் செல்ல இயலவில்லை. என் வீட்டை சுற்றி சுற்றி நிருபர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். பிரியங்காவின் செயலால் நான் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறேன். பிரியங்கா பிரசாரத்துக்கு என்னை ஏன் பயன்படுத்துகிறார்?

நான் சாதாரண குடும்ப பெண். திடீரென அரசியல் ரீதியாக எனது படம் பயன்படுத்தி இருப்பது என்னை மிகவும் வேதனைக் குள்ளாக்கி இருக்கிறது. என்னை பலிகடா ஆக்கக் கூடாது? வாக்காளர் பட்டியலில் உள்ள எனது வயது தவறை சரி செய்து கொடுத்தாலே போதுமானது.

நான் எனது கணவர், குழந்தைகளுடன் நிம்மதியாக வாழ்ந்து வருகிறேன். என் அமைதியை சீர்குலைக்கும் வகையில் பிரியங்கா நடந்துள்ளார். அவர் ஏன் இந்த விவகாரத்தில் தலையிடுகிறார்.

எனக்கு நல்லது செய்வதாக நினைத்துக் கொண்டு எனக்கு தொல்லை ஏற்படுத்தி உள்ளார். இதை எப்படி எனக்கு பிரியங்கா கொடுத்த ஆதரவாக கருத முடியும். என்னை தவறான முறையில் அவர் பிரசாரம் செய்து உள்ளார்.

இந்த தவறுக்கு நான் காரணம் அல்ல. அதிகாரிகள் தவறை திருத்துவதாக சொல்லி இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது எனது முகவரியை பிரியங்கா நாடு முழுவதும் வெளிப்படுத்தி எனக்கு தொல்லையை ஏற்படுத்தி இருக்கிறார். இதை செய்வதற்கு அவர் யார்?

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News