பீகாரில் 2ம் கட்ட வாக்குப்பதிவு- காலை 11 மணி வரை 31.38 சதவீத வாக்குப்பதிவு
- காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
- சுமார் 4 லட்சம் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பீகார் சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. 243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டசபை தேர்தலில் முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு கடந்த 6-ந்தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதுவரை இல்லாத அளவாக 65.08 சதவீத வாக்குகள் பதிவாகின.
இதனை தொடர்ந்து மீதமுள்ள 122 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 3 கோடியே 70 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 45 ஆயிரத்து 399 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்த சுமார் 4 லட்சம் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இந்த நிலையில், 122 தொகுதிகளுக்கு நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் காலை 11 மணி நிலவரப்படி 31.38 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.