இந்தியா

ரெயில்வே பணி நியமனத்துக்கு நிலம் பெற்ற வழக்கு: தேஜஸ்விடம் அமலாக்கத்துறை இன்று விசாரணை

Published On 2023-04-11 07:36 GMT   |   Update On 2023-04-11 07:36 GMT
  • வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. ஆவணங்களும் கிடைத்தன.
  • வழக்கில் இன்று ஆஜராக தேஜஸ்வி யாதவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.

புதுடெல்லி:

பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் நிறுவனருமான லாலு பிரசாத் யாதவ் 2004 முதல் 2009 வரையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது மத்திய ரெயில்வே துறை மந்திரியாக இருந்தார்.

அப்போது ரெயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி நிலத்தை பெற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. லஞ்சமாக நிலத்தை வாங்கி தனது குடும்பத்தினரின் பெயரில் லாலு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதோடு சட்ட விரோத பண பரிமாற்றங்கள் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடந்து வருகிறது. லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரிதேவி, மகள் மிசா பாரதி, மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட 16 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து அவர்களது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. ஆவணங்களும் கிடைத்தன.

இந்த வழக்கில் இருந்து லாலு, ராப்ரிதேவி டெல்லி கோர்ட்டில் ஆஜராகி சம்மன் பெற்றார். மிசா பாரதியிடம் அமலாக்கத் துறை ஏற்கனவே விசாரணை நடத்தி இருந்தது.

பீகார் துணை முதல்-மந்திரியும், ராஷ்டீரிய ஜனதாதள தலைவருமான தேஜஸ்வி யாதவிடம் இந்த ஊழல் தொடர்பாக கடந்த மாதம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி இருந்தனர். 4-வது முறையாக அனுப்பப்பட்ட சம்மனுக்கு பிறகே அவர் ஆஜரானார். அவரிடம் 8 மணி நேரம் சி.பி.ஐ. விசாரணை நடத்தி இருந்தது.

இந்நிலையில் ரெயில்வே பணி நியமனத்தில் நிலத்தை லஞ்சமாக பெற்ற வழக்கில் இன்று ஆஜராக தேஜஸ்வி யாதவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.

இதைதொடர்ந்து அவர் மத்திய டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு இன்று காலை 10.45 மணிக்கு ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். தேஜஸ்வி யாதவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News