இமாச்சல் காங்கிரஸ் வழிகாட்டுதல் குழு தலைவர் பதவியில் இருந்து ஆனந்த் சர்மா திடீர் விலகல்
- காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஆனந்த் சர்மா.
- இவர் இமாச்சல பிரதேச காங்கிரஸ் வழிகாட்டுதல் குழு தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தி கொண்டுள்ளவர்கள் ஜி23 தலைவர்கள் என அழைக்கப்படுகின்றனர். குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா ஆகியோரும் அதில் அடக்கம். காங்கிரஸ் கட்சியில் ஆனந்த் சர்மா பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
இதற்கிடையே, கடந்த ஏப்ரல் 26-ம் தேதி இமாச்சல பிரதேச காங்கிரசின் வழிகாட்டுதல் குழு தலைவராக முன்னாள் மத்திய மந்திரி ஆனந்த் சர்மா நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், முன்னாள் மத்திய மந்திரி ஆனந்த் சர்மா இமாச்சல பிரதேச காங்கிரசின் வழிகாட்டுதல் குழு தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அக்கட்சி தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ள ஆனந்த் சர்மா, கட்சிக் கூட்டங்கள் தொடர்பாக தன்னிடம் எந்தவித ஆலோசனையும் நடத்தப்படவில்லை, அழைக்கவும் இல்லை. இதனால் எனது சுயமரியாதை பாதிக்கப்பட்டுள்ளது. அதில் எவ்வித சமரசமும் செய்து கொள்ள முடியாது. இதனால் இமாச்சல பிரதேச காங்கிரஸ் வழிகாட்டுதல் குழு தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக கூறியுள்ள அவர், இருப்பினும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்வேன் எனக்கூறியுள்ளார்.
ஏற்கனவே, ஜம்மு காஷ்மீர் பிரசார குழு தலைவராக நியமிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே முன்னாள் மத்திய மந்திரி குலாம் நபி ஆசாத் அப்பதவியில் இருந்து ராஜினாமா செய்து காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி அளித்தது குறிப்பிடத்தக்கது.