ரூ.25 லட்சம் சம்பளம் வரும் வேலையை உதறிவிட்டு உணவு டெலிவரி ஊழியர் ஆன பெங்களூரு இளைஞர் - ஏன் தெரியுமா?
- அவரது வரவிருக்கும் திருமணம், நிலையான சம்பளம் என பலவற்றை குறிப்பிட்டு குடும்பத்தினர் அவரது முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
- டெலிவரி வேலையின்போது லிஃப்டைப் பயன்படுத்தியதற்காக வாட்ச்மேன்களால் திட்டப்பட்டது போன்ற அவமானங்களை அவர் சந்தித்தார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ஒரு இளைஞர் ஆண்டுக்கு ரூ.25 லட்சம் சம்பளம் தரும் தனது கார்ப்பரேட் வேலையை விட்டுவிட்டு உணவு டெலிவரி ஊழியராக மாறியுள்ளார்.
இதற்கு பின்னால் ஒரு காரணமும் இருக்கிறது. அதாவது அவர் சொந்தமாக கிளவுட் கிச்சன் உணவகம் தொடங்கும் கனவை கொண்டிருந்தார்.
இதற்காக, தான் பயின்ற பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள பகுதியில் என்ன வகையான உணவுக்கு தேவை உள்ளது, நுகர்வோர் என்ன விலையில் அதை வாங்கத் தயாராக உள்ளனர், எந்தெந்த பகுதிகளில் ஆர்டர்கள் அதிகம் வருகின்றன என்பதைத் தானே கண்டுபிடிக்க விரும்பினார். இந்தக் கள ஆராய்ச்சிக்கு டெலிவரி ஊழியராக ஆனார்.
அவரது வரவிருக்கும் திருமணம், நிலையான சம்பளம் என பலவற்றை குறிப்பிட்டு குடும்பத்தினர் அவரது முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சில நண்பர்கள் அவரை கேலி செய்தனர், மேலும் டெலிவரி வேலையின்போது லிஃப்டைப் பயன்படுத்தியதற்காக வாட்ச்மேன்களால் திட்டப்பட்டது போன்ற அவமானங்களை அவர் சந்தித்தார்.
இவ்வளவு தடைகள் இருந்தபோதிலும், அவர் பின்வாங்கவில்லை. தனது ஆராய்ச்சியின் மூலம், குறைந்த விலையில் அதிகம் விற்பனையாகும் 12 வகையான உணவுப் பொருட்களை அவர் அடையாளம் கண்டார்.
இந்த மாதிரியின் மூலம் 3-4 மாதங்களுக்குள் லாபம் ஈட்ட முடியும் என்று அவர் நம்பிக்கை கொண்டுள்ளார். அவரது நண்பர் அவர் குறித்து இவ்வாறு சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது.