அமைதியாக நடந்து முடிந்த குஜராத் முதற்கட்ட தேர்தல்: 59.24 சதவீத வாக்குப்பதிவு
- தபி மாவட்டத்தில் அதிகபட்சமாக 72.32 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
- மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு வருகிற 5-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
அகமதாபாத்:
182 சட்டசபை தொகுதிகளை கொண்ட குஜராத் மாநிலத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதற்கட்டமாக 19 மாவட்டங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கு அமைதியான முறையில இன்று வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. இன்றைய தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 59.24 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 5 மணிக்கு முன்னதாக வந்து வரிசையில் காத்திருந்தவர்கள் வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டது. எனவே, இறுதி வாக்குப்பதிவு சதவீதம் சற்று அதிகமாக இருக்கும்.
தபி மாவட்டத்தில் அதிகபட்சமாக 72.32 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. பழங்குடியின மக்கள் அதிகம் உள்ள இந்த மாவட்டத்தில் வியாரா மற்றும் நிசார் ஆகிய தொகுதிகள் உள்ளன. நர்மதா மாவட்டத்தில் 68.09 சதவீத வாக்குகள் பதிவாகின. பாவ்நகரில் மிகக்குறைந்த அளவாக 51.34 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. நர்மதா தவிர நவ்சாரி (65.91 சதவீதம்), தாங் (64.84 சதவீதம்), வல்சாத் (62.46 சதவீதம்) மற்றும கிர் சோம்நாத் (60.46 சதவீதம்) ஆகிய மாவட்டங்களில் 60 சதவீதத்தை தாண்டி வாக்கு பதிவாகி உள்ளது.
முதற்கட்ட தேர்தலில் 70 பெண்கள் உள்பட மொத்தம் 788 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு வருகிற 5-ந்தேதி (திங்கட்கிழமை) தேர்தல் நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை 8- ந்தேதி நடக்கிறது.
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி என மும்முனை போட்டி நிலவுகிறது