போலீஸ் உடற்தகுதி தேர்வுக்காக தீவிர பயிற்சி: மைதானத்தில் ஓடியபோது சுருண்டு விழுந்து உயிரிழந்த இளம்பெண்
- எழுத்து தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.
- உடற்தகுதி தேர்வுக்காக தீவிர பயிற்சி மேற்கொண்டபோது துயர சம்பவம்.
கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள தளிகுளம் குருட்டிபரம்பு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். ஆட்டோ டிரைவர். இவரது மகள் ஆதித்யா (வயது 22). பட்டதாரியான இவர் போலீஸ் வேலைக்கு விண்ணப்பித்திருந்தார்.
அது தொடர்பாக நடத்தப்பட்ட எழுத்து தேர்வில் கலந்து கொண்ட ஆதித்யா, அதில் தேர்ச்சி பெற்றார். ஆகவே அவர் உடல் தகுதி தேர்வுக்கு தயாராகி வந்தார். இதற்காக தனது தோழிகள் சிலருடன் தினமும் மைதானத்துக்கு சென்று ஓட்டப்பயிற்சி உள்ளிட்டவைகளை செய்து வந்தார்.
நேற்று அவர் உடற்பயிற்சி செய்வதற்காக தளிகுளம் அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்துக்கு தனது தந்தையுடன் ஆட்டோவில் சென்றார். பின்பு மைதானத்தில் தனது தோழிகளுடன் ஓடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மைதானத்தில் சுருண்டு விழுந்தார்.
அதனைப்பார்த்த அவருடன் ஓடிக்கொண்டிருந்த தோழிகளும், மைதானத்துக்கு வெளியே நின்றுகொண்டிருந்த தந்தை சுரேசும் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் ஆதித்யாவை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் பரிதாபமாக இறந்து விட்டார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் உடல்தகுதி தேர்வுக்காக தீவிர உடற்பயிற்சி செய்ததால் ஆதித்யா இறந்துவிட்டதாக தெரிகிறது. பிரேத பரிசோதனை முடிவில் தான் அவரது இறப்புக்கான காரணம் தெரியவரும்.
போலீஸ் உடல்தகுதி தேர்வுக்கு தயாராகி வந்த இளம்பெண் மைதானத்தில் சுருண்டுவிழுந்து இறந்த சம்பவம் திருச்சூரில் பரிதா பத்தை ஏற்படுத்தியது.