இந்தியா
டெல்லியில் இடியுடன் கனமழை- விமான சேவை பாதிப்பு
பலத்த காற்றுடன் கனமழை தொடரும் என்பதால் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு டெல்லி மக்களை, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. பலத்த காற்று மற்றும் கனமழையால் டெல்லியின் சில பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து முடங்கியது.
டெல்லி என்சிஆர் அதை ஒட்டிய பகுதிகளில் மணிக்கு 60-90 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கவும், பயணத்தைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
விமான புறப்பாடு மற்றும் வருகை குறித்த தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களை தொடர்பு கொள்ளுமாறு பயணிகளை விமான நிலைய அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்...கொல்கத்தாவில் பரபரப்பு - திரிணாமுல் காங்கிரசில் இணைந்த பாஜக எம்.பி.