இந்தியா
பாராளுமன்றம்

வெளிநாட்டு சிறைகளில் 8,278 இந்திய கைதிகள் உள்ளனர்- மத்திய அரசு தகவல்

Published On 2022-04-01 16:15 GMT   |   Update On 2022-04-01 16:15 GMT
தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகள் கூட பொதுவாக சிறையில் இருக்கும் வெளிநாட்டவர்கள் பற்றிய விரிவான தகவல்களை வழங்குவதில்லை என மத்திய இணை மந்திரி கூறினார்.
புதுடெல்லி:

வெளிநாடுகளில் உள்ள சிறைச்சாலைகளில் உள்ள இந்திய கைதிகள் தொடர்பான கேள்விக்கு, மக்களவையில் இன்று வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளீதரன் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அவர் கூறியதாவது:-

வெளிநாடுகளில் உள்ள சிறைச்சாலைகளில் விசாரணைக் கைதிகள், தண்டனைக் கைதிகள் என 8,278 இந்தியர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 156 பேர் ஆயுள் தண்டனை கைதிகள் ஆவர்.

பல நாடுகளில் நடைமுறையில் உள்ள வலுவான தனியுரிமைச் சட்டங்கள் காரணமாக, சம்பந்தப்பட்ட நபர்கள் அத்தகைய தகவலை வெளிப்படுத்த சம்மதித்தால் தவிர, கைதிகள் பற்றிய தகவல்களை உள்ளூர் அதிகாரிகள் பகிர்வதில்லை. தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகள்கூட பொதுவாக சிறையில் இருக்கும் வெளிநாட்டவர்கள் பற்றிய விரிவான தகவல்களை வழங்குவதில்லை.

வெளிநாட்டு சிறைகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்கிறது. அவர்களை  திருப்பி அனுப்பும் நடைமுறை தொடர்பாக, இந்திய தூதரகங்கள் மூலம் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. 

கைதிகளை திருப்பி அனுப்பும் நடவடிக்கையின் கீழ், ஜனவரி 2020 முதல் பிப்ரவரி 2022 வரை இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு 2 இந்திய கைதிகள் அனுப்பப்பட்டுள்ளனர். ஒரு ஜெர்மன் கைதி இந்தியாவில் இருந்து ஜெர்மனிக்கு அனுப்பப்பட்டுள்ளார். 2 வங்காளதேச கைதிகள் இந்தியாவில் இருந்து அவர்களின் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News