இந்தியா
அஜித் பவார்

உத்தவ் தாக்கரே தலைமையில் 3 கட்சிகள் இணைந்தே ஆட்சியை நடத்துகிறது: அஜித் பவார்

Published On 2022-03-29 02:58 GMT   |   Update On 2022-03-29 02:58 GMT
சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகள் இணைந்தே ஆட்சியை நடத்துவதாக கூறி பா.ஜனதாவுக்கு, துணை முதல்-மந்திரி அஜித் பவார் பதிலடி கொடுத்துள்ளார்.
ரத்னகிரி :

மராட்டிய மாநில பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் சமீபத்தில் அளித்த பேட்டியில், மகா விகாஸ் அகாடியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சிதான் மராட்டிய அரசை நடத்துகிறது என்று கூறினார்.

இதேபோல பா.ஜனதா எம்.பி. சுஜய் விகே பாட்டீல் கூறுகையில், “மகா விகாஸ் அகாடி கூட்டணி நடத்தும் ஆட்சியானது தேசியவாத காங்கிரஸ் கணவராகவும், சிவசேனா அமைதியான மனைவியாகவும், காங்கிரஸ் அழைக்கப்படாத விருந்தினராகவும் இருக்கும் திருமணத்திற்கு நிகரானது” என்றார்.

இதுகுறித்து நேற்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு துணை முதல்-மந்திரி அஜித் பவார் கூறியதாவது:-

மகா விகாஸ் அகாடி கூட்டணியில் உத்தவ் தாக்கரே தலைமையில் நாங்கள் அனைவரும் ஒன்றாக அரசை நடத்தி வருகிறோம். இந்த கூட்டணியில் உத்தவ் தாக்கரேவின் பங்கு முக்கியமானது. அவருக்கு தேசியவாத காங்கிரசும், காங்கிரஸ் கட்சியும் ஆதரவளிக்கிறது.

சுஜய் விகே பாட்டீல் கருத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது இல்லை. சிறப்பாக செய்ய எதுவும் இல்லாதவர்கள் வெறும் கருத்துகளை தூவி செல்வதில் தங்களை ஈடுபடுத்தி கொள்கிறார்கள். இதற்கு பதில் மாநில அரசு எடுக்கும் முடிவுகளை ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான், “ரத்னகிரியின், நானார் பகுதியில் கைவிடப்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை திட்டமானது மாநில அரசு தனது மனதை மாற்றிக்கொண்டால் மீண்டும் புத்துயிர் பெறும்” என்று தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த துணை முதல்-மந்திரி அஜித் பவார், இதுபோன்ற முடிவுகள் முதல்-மந்திரி மட்டத்தில் எடுக்கப்படுகிறது. முதல்-மந்திரியுடன் விவாதித்த பின்னரே இந்த திட்டம் குறித்து அதிகாரப்பூர்வமாக பேச முடியும்” என்றார்.
Tags:    

Similar News