இந்தியா
கோப்புப்படம்

கோவாவில் தொங்கு சட்டசபை: கருத்துக் கணிப்பால் கணக்குப்போடும் பா.ஜனதா- காங்கிரஸ்

Published On 2022-03-08 09:14 GMT   |   Update On 2022-03-08 09:14 GMT
கோவாவில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்பில் கூறப்பட்ட நிலையில் அம்மாநில முதல்வர் இன்று மோடியை சந்தித்து பேசினார்.
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தல் நேற்றுடன் முடிவடைந்தது. நாளைமறுதினம் (10-ந்தேதி) வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. 40 தொகுதிகளை கொண்ட கோவாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என தேர்லுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை தொங்கு சட்டசபை அமையும் நிலை ஏற்பட்டால் என்ன செய்வது? என்பது குறித்து தற்போதே பா.ஜனதா- காங்கிரஸ் கட்சிகள் திட்டமிடத் தொடங்கியுள்ளன.

கோவாவில் மீண்டும் பா.ஜனதா ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறது. அதனால் அந்த மாநிலத்தின் முதல்வர் பிரமோத் சவந்த் இன்று டெல்லி சென்றார். டெல்லி சென்ற அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது கோவாவில் ஒருவேளை தொங்கு சட்டசபை அமைந்தால் எப்படி ஆட்சி அமைப்பது குறித்து பிரதமர் மோடியிடம் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. பிரமோத் தேர்தலுக்கான பா.ஜனதா கட்சியின் பொறுப்பாளர் தேவேந்திர பட்நாவிஸ்-ஐ இன்று மும்பையில் சந்திக்கிறார்.

பா.ஜனதா மகாராஷ்டிரா கோமன்டாக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் என நம்புகிறது. மேலும், சில சுயேட்சை வேட்பாளர்களையும் இழுத்துவிடலாம் நம்புகிறது. கடந்த 2019-ந்தேதி பிரமோத் சவந்த் பதவி ஏற்றபோது, எம்.ஜி.பி.-க்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் பிரமோத்துக்கு ஆதரவு கொடுக்க அக்கட்சி விரும்பவில்லை.

ஒருவேளை பா.ஜனதா மெஜாரிட்டி இடங்களை பிடிக்காவிடில் ஆதரவு கட்சிகளின் நெருக்கடியால் பிரமோத் சவந்த் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மறுபக்கம் காங்கிரஸ் கடந்த முறை அதிக இடங்களை பிடித்தபின் ஆட்சியை இழந்தது போன்று தற்போதும் இழந்து விடக்கூடாது என்பதில் கவனம் செலுத்தி வருகிறது. இதனால், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைக்க தயாராகி வருகிறது. இரண்டு கட்சிகளும் காங்கிரஸ்க்கு எதிராக டெல்லி மற்றும் மேற்கு வங்காளத்தில் செயல்பட்டு வந்தாலும், காங்கிரஸ்க்கு இதைத்தவிர வேறு வழியில்லை.

பா.ஜனதாவிற்கு எதிராக உள்ள எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க எங்கள் கதவு திறந்தே இருக்கும். கோவாவில் பா.ஜனதாவுக்கு எதிராக உள்ள திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுடன் கூட்டணி வைக்க தயார் என கோவா மாநிலத்திற்கு காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் தெரிவித்துள்ளார்.

ஒருவேளை தொங்கு சட்டசபை அமைந்தால் எம்.எல்.ஏ.-க்கள் கடத்தல் போன்ற நாடகம் அரங்கேற்றப்படலாம்.

Tags:    

Similar News