இந்தியா
கைது

பாலியல் தொல்லைக்கு பயந்து சிறுமி தற்கொலை- முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் கைது

Published On 2022-01-31 12:25 IST   |   Update On 2022-01-31 12:25:00 IST
பாலியல் தொல்லைக்கு பயந்து 5-வது மாடியிலிருந்து குதித்து சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் முன்னாள் மாநகராட்சி கவுன்சிலரை கைது செய்தனர்.
திருப்பதி:

ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெற்றோருடன் வசித்து வந்தார். அதே குடியிருப்பை சேர்ந்தவர் வினோத் ஜெயின் (வயது 50). இவர் கடந்த 2014-ம் ஆண்டு விஜயவாடா மாநகராட்சி கவுன்சிலராக இருந்தார். தற்போது ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வருகிறார்.

அடுக்குமாடி குடியிருப்பின் 5-வது மாடியில் சிறுமி நடைபயிற்சி செய்வது வழக்கம். நேற்று முன்தினம் சிறுமி வழக்கம் போல் நடைபயிற்சி செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த வினோத் ஜெயின் சிறுமியிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் விரக்தி அடைந்த சிறுமி நேற்று 5-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் உடல் சிதறி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த விஜயவாடா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விஜயவாடா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சிறுமியின் வீட்டில் தனது பெற்றோருக்கு சிறுமி எழுதிய 3 பக்கம் கொண்ட உருக்கமான கடிதம் சிக்கியது. கடிதத்தில் சிறுமி எழுதியிருப்பதாவது, மாடியில் நடைபயிற்சி சென்றபோது வினோத் ஜெயின் கடந்த 2 மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.

இதுகுறித்து வெளியில் சொன்னால் உன்னையும் உனது குடும்பத்தாரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டினார். அவரது மிரட்டலுக்கு பயந்து உங்களிடம் கூறவில்லை. தொடர்ந்து அவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால் தற்கொலை செய்து கொள்கிறேன் என கடிதம் எழுதி இருந்தார்.

இதையடுத்து போலீசார் வினோத் ஜெயினை கைது செய்தனர். அவரிடம் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News