இந்தியா
எல்லைகளை பாதுகாக்க உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பம்: அமித் ஷா
இந்திய எல்லையில் ஆளில்லா விமானத்தை தடுக்கும் உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்ப வசதிகள் எல்லை பாதுகாப்பு படையினருக்கு விரைவில் வழங்கப்படும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
எல்லை பாதுகாப்பு படை தோற்றுவிக்கப்பட்டதன் 57-ம் ஆண்டு விழா ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் நகரில் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற அமித் ஷா, சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பதக்கங்களை வழங்கி கௌரவித்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், நாட்டின் பாதுகாப்பு பணி வரிசையில் எல்லைப் பாதுகாப்பு படையே முன்னணியில் இருக்கிறது என்றார்.
எல்லைப் பாதுகாப்பு என்பது தேசிய பாதுகாப்புக்கு சமமானது என்றும் அவர் குறிப்பிட்டார். பி.எஸ்.எப். காவல்துறை, சி.ஆர்.பி.எப். ஆகியவற்றை சேர்ந்த 35 ஆயிரம் வீரர்கள் நாட்டிற்காக தங்களது உயிரை தியாகம் செய்துள்ளதாக அவர் கூறினார். அவர்களது மிகப்பெரிய தியாகத்திற்கு தாம் மரியாதை செலுத்துவதாக அமித் ஷா தெரிவித்தார்.
எல்லைப்பகுதியில் நிகழும் தீவிரவாத ஊடுருவலை தடுக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுத்து வருவதாக கூறிய அவர், எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்ப வசதிகளை செய்து கொடுக்க மத்திய அரசு உறுதியுடன் உள்ளது என்றார்.
இதற்காக ஆளில்லா விமான தடுப்பு தொழில்நுட்பத்தை இந்தியா உருவாக்கி வருவதாகவும் விரைவில் அவை எல்லை பாதுகாப்பு வீரர்களுக்கு வழங்கப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டார்.