செய்திகள்
நவ்ஜோத் சிங் சித்து

இம்ரான்கான் எனது மூத்த சகோதரர் - கர்தார்பூரில் சித்து சர்ச்சை பேச்சு

Published On 2021-11-20 21:45 GMT   |   Update On 2021-11-20 21:45 GMT
பஞ்சாப் காங்கிரஸ் தலைவரான சித்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை மூத்த சகோதரர் எனக் கூறும் வீடியோ ஒன்று வெளியாகி பஞ்சாப் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி:

சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் இறுதிக் காலத்தில் பாகிஸ்தானின் கர்தார்பூரில் வாழ்ந்து மறைந்தார். அவரது நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள தர்பார் சாகிப் குருத்வாரா, சீக்கியர்களின் புனித தலம் ஆகும்.

கடந்த 18-ம் தேதி திறக்கப்பட்டுள்ள கர்தார்பூர் சாலை வழியாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சித்து  தர்பார் சாகிப் குருத்வாராவில் வழிபாடு நடத்தினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே வர்த்தகம் நடைபெற வேண்டும். நாம் எல்லைகளை திறக்க வேண்டும். பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் மேற்கொண்ட முயற்சியால்தான் கர்தார்பூர் சாலை திறக்கப்பட்டது. இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

கர்தார்பூர் சென்ற  சித்து, தன்னை வரவேற்ற பாகிஸ்தான் அதிகாரிகளிடம் இம்ரான் கான் தனக்கு மிகவும் பிடித்தமான நபர். தனது மூத்த சகோதரர் போன்றவர் என கூறிய பதிவுகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. பஞ்சாப் அரசியல் வட்டாரத்தில் இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை சித்து மூத்த சகோதரர் என கூறியதை பா.ஜ.க. கடுமையாக விமர்சித்துள்ளது.

Tags:    

Similar News