செய்திகள்
கைது

மத்திய பிரதேசத்தில் 24 பேரை பலி கொண்ட விஷ சாராய வழக்கில் முக்கிய குற்றவாளி சென்னையில் கைது

Published On 2021-01-18 08:17 IST   |   Update On 2021-01-18 08:17:00 IST
மத்திய பிரதேசத்தில் 24 பேரை பலி கொண்ட விஷ சாராய வழக்கில் முக்கிய குற்றவாளி முகேஷ் கிரார் நேற்று சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டார்.
போபால்:

மத்திய பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்துக்கு உட்பட்ட மான்பூர் மற்றும் பகாவலி கிராமங்களில் கடந்த 11-ந்தேதி விஷ சாராயம் குடித்த 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் முகேஷ் கிரார் என்பவர்தான் அவர்களுக்கு விஷ சாராயத்தை வழங்கியது கண்டறியப்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அவர் தலைமறைவானார். அவர் உள்பட 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். மேலும் அவர்களது தலைக்கு ரூ.10 ஆயிரம் பரிசும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் முக்கிய குற்றவாளி முகேஷ் கிரார் நேற்று சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்த மத்திய பிரதேச போலீசார், பின்னர் மொரேனா அழைத்து சென்றனர். முன்னதாக இந்த சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் பாகினி போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய அனைத்து போலீசாரையும் மாநில அரசு இடமாற்றம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News