செய்திகள்
புதிய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்

அசோக் லவாசாவின் ராஜினாமாவை தொடர்ந்து புதிய தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமணம்

Published On 2020-08-21 19:08 GMT   |   Update On 2020-08-21 20:43 GMT
தேர்தல் ஆணையர் பதவியை அசோக் லவாசா ராஜினாமா செய்ததை தொடர்ந்து அந்த பதவிக்கு ராஜீவ் குமார் நியமணம் செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி:

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக உள்ளவர் சுனில் அரோரா. இவருக்கு அடுத்த இடத்தில் தேர்தல் ஆணையத்தில் மிகப்பெரிய பொறுப்பில் இருப்பவர் அசோக் லவாசா. 

தலைமை தேர்தல் அதிகாரியாக உள்ள அரோராவின் பதவி காலம் 2021 ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது. அவரது பதவிகால முடிவுக்கு பின்னர் இந்திய தலைமை தேர்தல் அதிகாரியாக பொறுப்பு அசோக் லவாசாவுக்கு வழங்கப்படும்.

ஆனால், ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவராக தற்போது பொறுப்பில் இருக்கும் திவாகர் குப்தா, வரும் 31ம் தேதி தனது பதவிக்காலத்தை நிறைவு செய்ய உள்ளார். இதனால் அந்த பொறுப்பு அசோக் லவாசாவுக்கு வழங்கப்பட்டது.

ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத்தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டதால் தனது தேர்தல் ஆணையர் பதவியை லவாசா ராஜினாமா செய்திருக்கிறார். தனது ராஜினாமா கடிதத்தை லவசா
குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைத்தார்.

லவசாவின் ராஜினாமா கடிதத்தை குடியரசுத்தலைவர் ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில், காலியாக இருந்த தேர்தல் ஆணையர் பதவிக்கு ராஜீவ் குமார் நியமணம் செய்யப்பட்டுள்ளார். புதிய தேர்தல் ஆணையராக ராஜீவ் குமாரை குடியரசுத்தலைவர் இன்று நியமணம் செய்தார். 

தேர்தல் ஆணையராக நியமணம் செய்யப்பட்டுள்ள ராஜீவ் குமார் முன்னாள் நிதித்துறை செயலராகவும் பணியாற்றியுள்ளார். 

தேர்தல் ஆணையர் பதவியை ராஜினாமா செய்துள்ள அசோக் லவாசா கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது நரேந்திரமோடி மற்றும் அமித்ஷா (பாஜக) ஆகியோர் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தபோதும் அவர்கள் மீது தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கைகளும் எடுக்காததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். 

தேர்தல் விதி மீறல் தொடர்பாக நரேந்திர மோடி, அமித் ஷா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காததற்கு ஆணையர் லவாசா எதிர்ப்பு 
தெரிவித்த சம்பவம் இந்திய அரசியலிலும், தேர்தல் ஆணைய வட்டாடத்திலும் பரபரப்பாக பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News