அயோத்தி வழக்கை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும்- ஆர்எஸ்எஸ் தலைவர் மனு
புதுடெல்லி:
அயோத்தியில் சர்ச்சைக் குரிய நிலம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில் முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையில் ஸ்ரீரவிசங்கர், வக்கீல் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோரைகொண்ட சமரச குழுவை அமைத்து அந்த குழு சார்பில் அளித்த அறிக்கையில் சமரச பேச்சு தோல்வியில் முடிந்து விட்டதாக அறிவித்தனர்.
இதையடுத்து 6-ந்தேதி முதல் தினமும் விசாரணை நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது. இந்த நிலையில் இன்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோவிந்தச் சார்யா சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தினமும் நடைபெறும் அயோத்தி நிலம் வழக்கை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும். அல்லது ஆடியோவை பதிவு செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார்.
மேலும் தன் மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இந்த மனு நீதிபதிகள் பாப்தே, கவய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறும்போது, நேரடி ஒளிபரப்பு செய்ய அல்லது விசாரணை நடவடிக்கைகளை பதிவு செய்ய கருவிகள் இருக்கிறதா என்று எங்களுக்கு தெரியவில்லை என்றனர்.
மேலும் அவசர வழக்காக விசாரிக்க மறுத்த நீதிபதிகள் இவ்விஷயம் கவனத்தில் கொள்ளப்படும் என்றனர்.