செய்திகள்
மம்தா பானர்ஜி

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை மத்திய விசாரணை முகமைகள் மிரட்டுகிறது - மம்தா

Published On 2019-07-21 11:34 GMT   |   Update On 2019-07-21 11:34 GMT
பா.ஜனதாவில் சேருமாறு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை மத்திய விசாரணை முகமைகள் மிரட்டுகிறது என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
2019 பாராளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் மேற்கு வங்காளத்தில் பா.ஜனதாவில் பிற கட்சியை சேர்ந்த அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் சேர்வது தொடர்கிறது. இந்நிலையில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை மத்திய விசாரணை முகமைகள் மிரட்டுகிறது, பா.ஜனதாவில் இணையவில்லை என்றால் நிதி மோசடி வழக்கில் சிக்க வைக்கப்படுவீர்கள் என மிரட்டப்படுகிறார்கள் என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கு பணம் கொடுத்தும் பா.ஜனதா ஆள்சேர்க்க முயற்சிக்கிறது எனவும் குற்றம் சாட்டியுள்ளார். 

தேர்தலுக்கு பின்னர் மாநிலத்தில் நடைபெற்ற மிகப்பெரிய அரசியல் பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் சேர்வதற்கு 2 கோடி ரூபாய் பணமும்,  ஒரு பெட்ரோல் பங்கும் வழங்கப்படுகிறது. கர்நாடகாவைப் போலவே, எல்லா இடங்களிலும் பா.ஜனதா குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறது. பா.ஜனதா மாதிரியை இங்கே பிரதிபலிக்க முயற்சிக்கிறது.

மத்திய அரசு நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பை அழிக்க முயற்சி செய்கிறது. பா.ஜனதா ஒரு விசித்திரமான முறையில் செயல்பட்டு வருவதாகவும், அதன் அரசு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நீடிக்காது. அவர்கள் (பா.ஜனதா) எந்த முன் தகவலும் ஆலோசனையும் இன்றி மசோதாக்களை கொண்டு வருகிறார்கள்...  பாராளுமன்றம் சுமூகமாக நடப்பதற்காக எதிர்க்கட்சிகளுக்குதான் பாராட்டு தெரிவிக்க வேண்டும், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அல்ல எனக் கூறியுள்ளார். 
Tags:    

Similar News