செய்திகள்

கர்நாடக முதல்வராக வெள்ளிக்கிழமை வரைக்கும் குமாரசாமி பதவியில் இருப்பார் - சதானந்த கவுடா

Published On 2019-05-22 15:26 GMT   |   Update On 2019-05-22 15:26 GMT
கர்நாடகாவில் குமாரசாமி வெள்ளிக்கிழமை வரைக்கும் பதவியில் இருப்பார் என பா.ஜ.க தலைவர் சதானந்த கவுடா கூறியுள்ளார்.
பெங்களூர்:

பாராளுமன்றத் தேர்தல் கருத்துக்கணிப்பில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 300 இடங்கள் வரையில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 பாராளுமன்றத் தொகுதிகளில் பா.ஜ.க. 25 தொகுதிகளில் வெல்லும் எனவும் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கர்நாடாகவில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் இடையே பஞ்சாயத்து தொடர்ந்து வரும் நிலையில், தேர்தல் கருத்துக்கணிப்பு பா.ஜ.க.வை உற்சாகம் அடைய செய்துள்ளது. 

மாநிலத்தில் ஆட்சியை கலைப்பதற்கு பாராளுமன்றத் தேர்தல் வரை காத்திருக்க பா.ஜ.க. டெல்லி தலைமை கூறியதாகவும், அதனால் எடியூரப்பா அமைதியாக இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 7 எம்.எல்.ஏ.க்களும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களும் தங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் பா.ஜனதா தரப்பு தகவல்கள் வெளியாகியது.



இதற்கிடையே, நாளை தேர்தல் முடிவு வெளியானதும் மாநிலத்தில் ஆட்சியை கலைக்க ஆப்ரேஷன் தாமரையை பா.ஜ.க. முன்னெடுக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவரும், மத்திய மந்திரியுமான சதானந்த கவுடா கூறுகையில், கர்நாடகாவில் குமாரசாமி வெள்ளிக்கிழமை காலைவரை தான் பதவியில் இருப்பார் என தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாநிலத்தில் புதிய அரசை அமைக்க பா.ஜ.க. தயார் நிலையில் உள்ளது. முதல் மந்திரியாக இருக்கும் குமாரசாமி வெள்ளிக்கிழமை காலைவரை தான் பதவியில் இருப்பார், அவரால் இரவு தூங்கவே முடியாது. அவர்களின் கூட்டணியில் பிளவு ஏற்படுவது நிச்சயம் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News