செய்திகள்

ஓட்டு எந்திரங்களில் குளறுபடிக்கு வாய்ப்பு - சரத்பவார்

Published On 2019-05-10 15:12 IST   |   Update On 2019-05-10 15:12:00 IST
ஓட்டு எந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் கூறியுள்ளார். #SharadPawar #PMModi

மும்பை:

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் தேர்தல் பிரசாரம் செய்ய சதாரா வருகை தந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஓட்டு எந்திரங்களில் குளறுபடி நடைபெறுவதாக ஏற்பட்ட புகாரை தொடர்ந்து தேர்தலுக்கு முன்பு ஆந்திரா மற்றும் குஜராத்தில் நிபுணர்கள் மூலம் பரிசோதனை நடத்தி காட்டப்பட்டது. அதில் நான் கலந்து கொண்டேன்.

அப்போது ஓட்டுகள் பா.ஜனதா கட்சிக்கு சென்றதை நான் நேரில் பார்த்தேன். எந்திரத்தில் ஓட்டு போடும் பட்டனை நான் அழுத்தினேன். ஆனால் நான் போட்ட ஓட்டு தாமரைக்கு சென்றது. தனிப்பட்ட முறையில் எனக்கு அந்த அனுபவம் கிடைத்தது.

எனவே ஓட்டு எந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது. அனைத்து ஓட்டு எந்திரங்களிலும் தவறு நடைபெறும் என சொல்லவில்லை. ஆனால் குளறுபடிகள் மற்றும் தவறுகள் நடைபெற வாய்ப்பு இல்லை என்று கூற முடியாது.


 

இந்த விவகாரம் குறித்து சில எதிர்க்கட்சிகள் கோர்ட்டில் முறையிட்டன. ஆனால் துரதிர்ஷ்ட வசமாக அவர்களின் முயற்சி வெற்றி பெறவில்லை.

ராஜீவ் காந்திக்கு எதிராக பிரதமர் மோடி கூறிய குற்றச்சாட்டுகள் துரதிர்ஷ்டவசமானது. நிரூபிக்க முடியாது. அவரது குடும்பம் நாட்டுக்காக பெரிய தியாகம் செய்துள்ளது. 2 தியாகிகளை நாட்டுக்கு தந்துள்ளது. எனவே அந்த குடும்பம் பற்றிய கருத்துக்களை மோடி மிக கவனமாக பேச வேண்டும்.

விடுமுறையை கழிக்க இந்திய ராணுவத்துக்கு சொந்தமான போர்க் கப்பலை ராஜீவ் காந்தி தவறான முறையில் பயன்படுத்தினார் என மோடி குற்றம் சாட்டியுள்ளார். இந்திய ராணுவ கப்பலை பயன்படுத்தியதில் ஆட்சே பனை எதுவுமில்லை.

ராணுவ மந்திரியாக இருந்த போது போர்க்கப்பலில் நான் அந்தமான் சென்று இருக்கிறேன். அது கடலில் தான் பயணம் செய்கிறது. பிரதமராக இருப்பவர் அதை பயன்படுத்துவதில் என்ன தவறு இருக்கிறது.

இவ்வாறு சரத்பவார் கூறினார். #SharadPawar #PMModi

Tags:    

Similar News