செய்திகள்

தமிழகத்தில் லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமன தடையை நீக்க முடியாது - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Published On 2019-04-30 02:16 IST   |   Update On 2019-04-30 02:16:00 IST
தமிழகத்தில் லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமனத்துக்கு மதுரை ஐகோர்ட்டு விதித்த இடைக்காலத் தடையை நீக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. #LokAyudha #SupremeCourt
புதுடெல்லி:

தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்புக்கு மாநில அரசு கடந்த சில நாட்களுக்கு முன் உறுப்பினர்களை நியமித்தது. இதில் அமைப்பின் தலைவராக ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தேவதாஸ் நியமிக்கப்பட்டார். மேலும் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகள் ஜெயபாலன், கிருஷ்ணமூர்த்தி, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜாராம் மற்றும் ஆறுமுகம் ஆகியோரை உறுப்பினர்களாக நியமித்து கடந்த 1-ந் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இதில் ராஜாராம், ஆறுமுகம் ஆகியோரின் நியமனத்தில் விதிகள் பின்பற்றப்படவில்லை எனக்கூறி கரூரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவர்கள் இருவரின் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்து இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர், ராஜாராம் மற்றும் ஆறுமுகம் ஆகியோரின் நியமனத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். அவர்கள் இருவரின் நியமனமும் சட்ட விதிகளுக்கு புறம்பானது என நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறினர்.

மதுரை ஐகோர்ட்டின் இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அமர்வில் நேற்று நடைபெற்றது.

இதில் தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி மற்றும் ராஜேந்திரன் தரப்பில் மூத்த வக்கீல் சிராஜூதீன் ஆகியோர் ஆஜரானார்கள். விசாரணை தொடங்கியதும், ‘லோக் ஆயுக்தா உறுப்பினர்களை நியமித்த தமிழக அரசின் உத்தரவுக்கு, மதுரை ஐகோர்ட்டு விதித்த இடைக்கால தடையை நீக்க முடியாது’ என நீதிபதிகள் தெரிவித்தனர்.

பின்னர் தமிழக அரசின் மனு மீதான பதில் மனுவை தாக்கல் செய்ய, இந்த வழக்கின் எதிர்மனுதாரர் ராஜேந்திரனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை வருகிற 8-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.  #LokAyudha #SupremeCourt
Tags:    

Similar News