தவறுதலாக வாக்களித்ததால் தனது விரலை துண்டித்த தொண்டர்
புதுடெல்லி:
உத்தரபிரதேசம் மாநிலம் ஷிகர்பூரை அடுத்த அப்துல்லாபூர் ஹூல சேன் கிராமத்தைச் சேர்ந்தவர் பவன்குமார் (25).
இவர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவாளர்.
நேற்று 2-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் பவன்குமாரின் ஊர் அடங்கிய புலந்த்சாகர் தொகுதிக்கு ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் ஓட்டு போட பவன்குமார் வாக்குச்சாவடி மையத்துக்கு சென்றார்.
அப்போது சமாஜ்வாடி- பகுஜன் சமாஜ் கூட்டணி கட்சி வேட்பாளர் யோகேஷ் வர்மாவின் சின்னத்தை அழுத்துவதற்கு பதிலாக பா.ஜனதாவின் தாமரை சின்னத்தை அழுத்தி விட்டார்.
பா.ஜனதா வேட்பாளரும், தற்போதைய அத்தொகுதி எம்.பி.யுமான போலாசிங்குக்கு ஓட்டு போட்டு விட்டார். தான் தவறாக பா.ஜனதாவுக்கு ஓட்டு போட்டதால் பவன்குமார் அதிர்ச்சியும், வெறுப்பும் அடைந்தார்.
அவரது ஆத்திரம் திடீரென்று தாமரை சின்னத்தை அழுத்திய தனது கை விரல் மீது திரும்பியது.
இதனால் கைவிரலை துண்டிக்க முடிவு செய்தார். உடனே கத்தியால் கை விரலை வெட்டி தண்டித்து கொண்டார்.
அதன்பின் பவன்குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறும் போது, “தான் தவறுதலாக பா.ஜனதாவுக்கு ஓட்டு போட்டு விட்டேன். எனது தவறுக்கு தண்டனையாக கை விரலை துண்டித்து கொண்டேன்” என்று கூறி உள்ளார். #LokSabhaElections2019 #BSPSupporter