செய்திகள்
கிரிமினல் அவதூறு வழக்கு - ராகுல் காந்தி நேரில் ஆஜராக குஜராத் நீதிமன்றம் உத்தரவு
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது அமித் ஷா இயக்குனராக பதவி வகிக்கும் கூட்டுறவு வங்கி 750 கோடி ரூபாயை மாற்றியதாக பேசிய ராகுல் காந்தியை நேரில் ஆஜராகுமாறு குஜராத் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. #Rahultoappear #defamationcase #ADCB
அகமதாபாத்:
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016-ம் ஆண்டில் கொண்டுவந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது பாஜக தலைவர் அமித் ஷா இயக்குனராக பதவி வகிக்கும் அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கி முறைகேடாக சுமார் 750 கோடி ரூபாயை மாற்றியதாக ராகுல் காந்தி முன்னர் குறிப்பிட்டிருந்தார்.
இவ்விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் மீது கிரிமினல் சட்டப்பிரிவின்கீழ் அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியின் சார்பிலும் அதன் தலைவர் சார்பிலும் கடந்த ஆண்டு அகமதாபாத் நகர கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுதாரர்களின் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
எனவே, இந்த வழக்கு தொடர்பாக மே 27-ம் தேதி நடைபெறும் விசாரணையில் நேரில் ஆஜராகுமாறு ராகுல் காந்தி மற்றும் ரந்தீப் சுர்ஜேவாலா ஆகியோருக்கு அகமதாபாத் நகர கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் எஸ்.கே. காத்வி இன்று சம்மன் அனுப்பியுள்ளார். #Rahultoappear #defamationcase #ADCB