செய்திகள்
பலியான புதுப்பெண் துசரா, கைதான கணவர் சந்துலால், மாமியார் கீதாலால்.

கேரளாவில் வரதட்சணை கொடுமை- 1½ மாதம் பட்டினி போட்டு இளம்பெண் கொலை

Published On 2019-03-30 04:23 GMT   |   Update On 2019-03-30 04:23 GMT
கேரள மாநிலம் கொல்லத்தில் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை 1½ மாதம் பட்டினி போட்டு கொன்ற கணவன் மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்தனர். #DowryTorture
கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளியை சேர்ந்த துளசிதாஸ், விஜயலட்சுமி ஆகியோரின் மகள் துசரா (வயது 27). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சந்துலால் (30) என்பவருக்கும் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.

பெண்ணின் தந்தை திருமணத்தின்போது பேசப்பட்ட வரதட்சணையை கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கணவர் மற்றும் மாமியார் இருவரும் சேர்ந்து புதுப்பெண்ணை அடித்து துன்புறுத்தி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 1½ மாதமாக புதுப்பெண் துசராவின் நடமாட்டம் இல்லை. துசரா வீட்டில் உள்ள தனி அறையில் அடைக்கப்பட்டிருந்தார். சத்தம்போடாமல் இருக்க வாயில் துணி கட்டப்பட்டிருந்தது.

காலையில் ஒரு டம்ளர் சர்பத், மதியம் ஒரு டம்ளர் தண்ணீர், இரவு மீண்டும் ஒரு டம்ளர் சர்பத் மட்டுமே ஜன்னல் வழியாக கொடுத்தனர்.

இந்நிலையில் நேற்று துசரா உடல் நிலை திடீரென மோசமானது. இதற்குமேல் வைத்திருந்தால் மாட்டிக்கொள்வோம் என்று பயந்த கணவரும், மாமியாரும் சேர்ந்து துசராவை கருநாகப்பள்ளியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி துசரா பரிதாபமாக இறந்தார்.

துசராவின் சாவில் சந்தேகம் இருப்பதாக டாக்டர்கள் யூபுள்ளி போலீசில் புகார் செய்தனர். போலீசார் சந்துலால் மற்றும் அவரது தாய் கீதாலால் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் போதிய வரதட்சணை கிடைக்காத ஆத்திரத்தில் துசராவை வீட்டில் அடைத்து வைத்து பட்டினி போட்டோம். திருமணத்தின்போது 60 கிலோ எடை இருந்தார். 1 ½ மாதம் தண்ணீர் மட்டுமே கொடுத்ததால் 40 கிலோ எடை குறைந்து இறக்கும்போது 20 கிலோ எடை மட்டுமே இருந்தார். பட்டினி போட்டே கொலை செய்தோம் என்று தாயும், மகனும் ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் கருநாகப்பள்ளி கோர்ட்டில் ஒப்படைத்தனர். #DowryTorture
Tags:    

Similar News