செய்திகள்

முத்தலாக் அவசர சட்டத்தை எதிர்த்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

Published On 2019-03-25 09:42 GMT   |   Update On 2019-03-25 09:42 GMT
முத்தலாக் அவசர சட்டத்தை எதிர்த்து கேரள மாநிலத்தை சேர்ந்த இஸ்லாமிய அமைப்பு தொடர்ந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. #SCDismisses #TripleTalaq #TripleTalaqOrdinance
புதுடெல்லி:

இஸ்லாம் மதத்தில் ஒரே நேரத்தில் முத்தலாக் என்று கூறி மனைவியை விவாகரத்து செய்யும் கணவனுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள்ள முத்தலாக் முறையை ஒழிப்பதற்கான சட்ட மசோதா பாராளுமன்ற மக்களவையில் 28-12-2017 அன்று தாக்கல் செய்யப்பட்டது.

அங்கு சிறிய விவாதத்துக்கு பின்னர் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, எதிர்க்கட்சிகளின் ஒப்புதல் கிடைக்காததால் மாநிலங்களவையில் முடங்கியுள்ளது.

இருப்பினும், ‘முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு மசோதா’ என்ற பெயரில் ஜனாதிபதியின் ஒப்புதலுடன் அவசர சட்டமாக முத்தலாக் ஒழிப்பு சட்டம் 19-9-2018 அன்று அமல்படுத்தப்பட்டது. பின்னர், அடுத்தடுத்து மீண்டும் இருமுறை நீட்டிப்பும் செய்யப்பட்டது. இறுதியாக 21-2-2019 அன்று இந்த அவசர சட்டம் நீட்டிக்கப்பட்டு தற்போது அமலில் உள்ளது.

அரசியலமைப்பு சட்டத்தின்படி இந்த அவசர சட்டம் செல்லுபடியாகத்தக்கதல்ல என கேரள மாநிலத்தை சேர்ந்த இஸ்லாமிய அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இதுதொடர்பாக இன்று விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, இவ்விவகாரத்தில் இந்த நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்தது.  #SCDismisses #TripleTalaq #TripleTalaqOrdinance
Tags:    

Similar News