செய்திகள்

விடுபட்ட 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும்- உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு

Published On 2019-03-12 05:43 GMT   |   Update On 2019-03-12 07:22 GMT
தமிழகத்தில் விடுபட்ட 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்த உத்தரவிடக்கோரி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. #DMK #TNBypoll
புதுடெல்லி:

பாராளுமன்றத் தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்தப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ஆனால், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இடைத்தேர்தல் நடத்தப்படாது என்றும், மீதமுள்ள 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பின்னர் அறிவித்தார்.

இந்த உத்தரவால் கடும் அதிருப்தி அடைந்த திமுக, இந்த 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாதது குறித்து தேர்தல் ஆணையத்தை நாட முடிவு செய்தது.

18 சட்டமன்றத் தொகுதிகளுடன் விடுபட்ட 3 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த முன்வராவிட்டால் நீதிமன்றம் சென்று தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றியது.



இந்நிலையில், திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் விடுபட்ட 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த உத்தரவிடும்படி கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று திமுக வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இதனை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், வெள்ளிக்கிழமை அவசர வழக்காக விசாரிப்பதாக கூறியுள்ளது. #DMK #TNBypoll
Tags:    

Similar News