செய்திகள்
என்னால் துப்பாக்கி தூக்க முடியாது: ஆனால் வீரர்களுக்கு உதவியாக வாகனம் ஓட்ட முடியும் - ஹசாரே
வயது முதிர்வால் என்னால் துப்பாக்கியை தூக்க முடியாது. ஆனால் தேவைப்பட்டால் வீரர்களுக்கு உதவியாக ராணுவ வாகனம் ஓட்ட முடியும் என மருத்துவமனையில் ஹசாரே கூறினார். #JammuKashmir #CRPF #AnnaHazare
சமூக ஆர்வலர் மற்றும் காந்தியவாதியான கிசன் பாபுராவ் ஹசாரே, அனைவராலும் அன்னா என அழைக்கப்பட்டு அன்னா ஹசாரே என அறியப்பட்டார். அவர் மத்தியில் லோக்பால் மற்றும் மராட்டியத்தில் லோக்ஆயுக்தா சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஜனவரி 30ந்தேதி தனது சொந்த கிராமமான அகமதுநகர் மாவட்டம் ராலேகான் சித்தியில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
அதன்பின் மராட்டிய முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தை முடித்து கொண்டார். ஆனால் உண்ணாவிரத போராட்டத்தால் அவரது உடல் நிலை மிகவும் மோசமாகி சுமார் 5 கிலோ வரை உடல் எடை குறைந்திருந்தார்.
இதனால் மகாராஷ்டிராவின் அகமதுநகரில் உள்ள மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ராணுவ வாகன ஓட்டுனராக பணிபுரிந்தவரான ஹசாரே, தீவிரவாத தாக்குதல் பற்றி அறிந்தவுடன் கூறும்பொழுது, வயது முதிர்வால் என்னால் துப்பாக்கியை தூக்க முடியாது. ஆனால் தேவை ஏற்பட்டால், நாட்டுக்காக போரிடும் நம்முடைய ராணுவ வீரர்களுக்கு பொருட்களை கொண்டு செல்வதற்கான வாகனம் ஓட்ட என்னால் முடியும் என கூறியுள்ளார்.
கடந்த 1960ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்த ஹசாரே அங்கு ராணுவ வாகன ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். அதன்பின் கடந்த 1965ம் ஆண்டு நடந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போரில் கேம் கரன் பிரிவில் பணியாற்றி உள்ளார்.#JammuKashmir #CRPF #AnnaHazare