செய்திகள்

ஆந்திராவில் பெற்ற மகளையே கொன்ற தந்தை- சக மாணவனுடன் பழகியதால் ஆத்திரம்

Published On 2019-02-05 10:56 GMT   |   Update On 2019-02-05 10:56 GMT
ஆந்திர மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட சக மாணவனுடன் பழகியதால் மாணவியை அவரது தந்தையே கவுரவ கொலை செய்ததாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #AndraGirldead
பிரகாசம்:

ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரகாசம் பகுதியை சேர்ந்தவர் வெங்கா ரெட்டி ஆவார். இவரது மகள் வைஷ்ணவி(20) ஓங்கோலில் உள்ள கல்லூரியில் பி.காம் படித்து வந்துள்ளார். இந்நிலையில், வைஷ்ணவி தன்னுடன் வகுப்பில் பயிலும் லிங்கசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மாணவனுடன் காதல் வசப்பட்டுள்ளார்.

இவர்கள் 2 ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில், 8 மாதங்களுக்கு முன் இவர்களுக்கிடையேயான காதல் வைஷ்ணவியின் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து பெற்றோர் வைஷ்ணவியை கண்டித்துள்ளனர். இதனை ஏற்க மறுத்து கடந்த 2ம் தேதி திருமணம் செய்ய வைஷ்ணவி  வீட்டை விட்டு சென்று மர்கபூர் சென்றுள்ளார்.

இதனை அறிந்த பெற்றோர் அந்த இடத்திற்கு விரைந்து, வைஷ்ணவியை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். பின்னர் இது தொடர்பாக பெற்றோருக்கும் வைஷ்ணவிக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது. அப்போது ஆத்திரமடைந்த தந்தை, மகள் என்றும் பாராமல் வைஷ்ணவியின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக தெரிகிறது.

வைஷ்ணவி மாரடைப்பால் இறந்ததாக  உறவினர்களிடம் கூறியுள்ளார். ஆனால், போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, வைஷ்ணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வைஷ்ணவியின் உடலில் காயங்கள் இருந்ததால், அவர் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியாகியிருப்பதாக கூறுகின்றனர்.

இது தொடர்பாக தல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வைஷ்ணவியின் தந்தையிடம்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரகாசம் மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 4 கவுரவ கொலைகள் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.  #AndraGirldead

Tags:    

Similar News