செய்திகள்

ஒடிசா மாநிலம் பூரி தொகுதியில் பிரதமர் மோடி போட்டி?

Published On 2019-01-03 05:38 GMT   |   Update On 2019-01-03 05:38 GMT
இந்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி ஒடிசா மாநிலம் பூரி தொகுதியில் போட்டியிடுவதற்கு 90 சதவீத வாய்ப்பு இருப்பதாக பாஜக மூத்த தலைவரான ரதீப் புரோகித் தெரிவித்துள்ளார். #pmmodi #parliamentelection

புவனேஸ்வர்:

கடந்த பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி 2 இடங்களில் போட்டியிட்டார். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியிலும், குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பின்னர் வதோதரா தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் வாரணாசி தொகுதிக்கு பதிலாக ஒடிசா மாநிலம் பூரி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடலாம் என்று தெரிகிறது.

இது குறித்து ஒடிசா பா.ஜனதா எம்.எல்.ஏ.வும், மூத்த தலைவருமான பிரதீப் புரோகித் கூறியதாவது:-

பூரி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுவதற்கு 90 சதவீத வாய்ப்பு உள்ளது.

ஒடிசா மாநிலத்தில் பிரதமர் போட்டியிட்டால் நாங்கள் பெருமை அடைவோம். இது குறித்து கட்சியின் தலைமைக்கு பரிந்துரை செய்துள்ளோம். பிரதமர் மோடி பூரி தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை மறுப்பதற்கு இல்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மத்திய மந்திரி தர்மேந்திரா பிரதான் கூறும்போது, “பூரி தொகுதியில் இருந்து பா.ஜனதா புதிய வடிவம் பெற தொடங்கும்” என்றார். பிரதமர் மோடி பூரி தொகுதியில் போட்டியிடுவது பற்றி கட்சி தலைமை தான் முடிவு செய்யும் என்றும் தெரிவித்தார்.

பாராளுமன்ற தேர்தலுடன் ஒடிசா மாநில சட்டசபை தேர்தலும் நடக்கிறது. #pmmodi #parliamentelection

Tags:    

Similar News