செய்திகள்
கர்நாடக கோவிலில் பிரசாதம் சாப்பிட்டு பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வு - உள்ளூர் மடாதிபதி கைது
கர்நாடக மாநிலத்தின் கோவிலில் பிரசாதம் சாப்பிட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக உள்ளூர் மடத்தின் ஜீயர் கைது செய்யப்பட்டு உள்ளார். #Karnataka #MarammaTemple #FoodPoisoning #SeerArrested
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் சாமராஜநகர் மாவட்டத்தின் ஹனுர் தாலுகாவில் சுல்வாடி கிராமத்தில் அமைந்துள்ளது மாரம்மன் கோவில்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று கோவிலில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜைகள் முடிந்ததும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பிரசாதம் சாப்பிட்ட சிறிது நேரத்தில் பக்தர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதில் 2 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர் என்றும் பலரது நிலைமை மோசமடைந்துள்ளது என்றும் முதல் கட்ட தகவல் வெளியானது. மேலும், பிரசாதம் சாப்பிட்ட 60க்கு மேற்பட்ட காகங்களும் இறந்து கிடந்தன.
இந்நிலையில், கடந்த 4 நாட்களில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மேலும் 9 பேர் இறந்தனர். இதையடுத்து, கர்நாடக கோவிலில் பிரசாதம் சாப்பிட்டு பலியானவர்கள் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 27 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, மாதேஸ்வரா மலை சலுரு மடத்தின் ஜீயர் பட்டடா இம்மடி மகாதேவசாமி மற்றும் ஒரு பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Karnataka #MarammaTemple #FoodPoisoning #SeerArrested