செய்திகள்

துப்பாக்கி முனையில் கார் கடத்தல் - பதன்கோட்டில் பயங்கரவாத தாக்குதலுக்கு சதியா?

Published On 2018-11-14 21:04 GMT   |   Update On 2018-11-14 21:04 GMT
துப்பாக்கி முனையில் கார் கடத்தியது தொடர்பாக பதன்கோட் மற்றும் கதுவா சுற்றுவட்டார பகுதிகளில் பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். #Pathankot #Jammu
ஜம்மு:

காஷ்மீரின் தோடா மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் ஜம்முவில் வாடகைக்கு சொகுசு கார் ஓட்டி வருகிறார். பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டுக்கு செல்ல வேண்டும் எனக்கூறி நேற்று முன்தினம் இரவு ராஜ்குமாரின் காரை 4 பேர் வாடகைக்கு எடுத்து சென்றனர்.

பஞ்சாப் மாநிலம் மதோபூர் அருகே கார் சென்ற போது திடீரென டிரைவர் ராஜ்குமாரை கடுமையாக தாக்கிய அவர்கள், பின்னர் துப்பாக்கியை காட்டி அவரை மிரட்டி காரில் இருந்து வெளியே தள்ளினர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

இது குறித்து இரு மாநில போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து பதன்கோட் மற்றும் கதுவா சுற்றுவட்டார பகுதிகளில் பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்லும் சாலைகளில் தீவிர கண்காணிப்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளத்தில் கடந்த 2016-ம் ஆண்டு தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதிகள், கடத்தப்பட்ட கார் ஒன்றின் மூலம் அங்கு வந்ததாக கூறப்பட்டது. எனவே அங்கு மீண்டும் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டு உள்ளதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இந்த காரை கடத்தி சென்ற 4 பேரையும் பிடிப்பதற்கான தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News