செய்திகள்

வெடிகளில் உள்ள சாமி படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் - விஸ்வ இந்து பரிஷத் வலியுறுத்தல்

Published On 2018-11-05 13:35 GMT   |   Update On 2018-11-05 13:35 GMT
தீபாவளிக்கு வெடிக்கப்படும் பட்டாசுகளின் மீது சுற்றப்பட்டிருக்கும் சாமி படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என விஸ்வ இந்து பரிஷத் தலைவர் வலியுறுத்தியுள்ளார். #VHPleader #crackerswithgodphotos #SasikantSharma
பெங்களூரு:

காற்றுமாசு மற்றும் ஒலிமாசுவை குறைக்கும் வகையில் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்கும் நேரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி, கர்நாடக மாநிலத்தில் இரவு 8 மணி முதல் 10 மணிவரை பட்டாசுகள் வெடிக்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், தீபாவளிக்கு வெடிக்கப்படும் பட்டாசுகளின் மீது சுற்றப்பட்டிருக்கும் சாமி படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவர் சசிகாந்த் சர்மா வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பெங்களூரு நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பட்டாசுகளில் இருந்து வெடித்துச் சிதறிய காகித குப்பைகளில் தெய்வங்களின் படங்கள் இடம்பெற்றிருப்பது இந்து மதத்தின்மீது பக்தி வைத்திருக்கும் மக்களின் மன உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் அமைவதாக குறிப்பிட்டுள்ளார்.



எனவே, இனி பட்டாசுகளின் மீது சாமி படங்களை ஒட்டி விற்கப்படுவதை அரசு தடை செய்ய வேண்டும்.இல்லாவிட்டால் இதற்காக நாங்கள் கோர்ட்டில் வழக்கு தொடரவும் தயாராக இருக்கிறோம்.

ஏற்கனவே, சாமி படங்களுடன் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ள வெடிகளை பயன்படுத்துவதை பொதுமக்கள் தாங்களாவே முன்வந்து தவிர்க்க வேண்டும் எனவும் சசிகாந்த் சர்மா வலியுறுத்தியுள்ளார்.

பஜ்ரங் தள், இந்து ஜக்ருதி சமிதி ஆகிய அமைப்புகளின் தலைவர்களும் இந்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
#VHPleader #crackerswithgodphotos #SasikantSharma
Tags:    

Similar News