செய்திகள்

போபர்ஸ் ஊழல் வழக்கில் சிபிஐ மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

Published On 2018-11-02 07:32 GMT   |   Update On 2018-11-02 07:32 GMT
போபர்ஸ் பீரங்கி ஊழல் தொடர்பான வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #BoforsCase #CBIAppeal #SupremeCourt
புதுடெல்லி:

ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது, இந்திய ராணுவத்திற்கு பீரங்கி வாங்குவதற்காக ஸ்வீடன் நாட்டின் ஆயுத தயாரிப்பு  நிறுவனமான போபர்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், இதில்  ராஜீவ் காந்திக்கும் தொடர்பு இருப்பதாகவும் பரபரப்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட போபர்ஸ் நிறுவனம் மற்றும் இந்துஜா சகோதரர்களை விடுதலை செய்து 2005ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.



இந்த தீர்ப்பு வெளியான 12 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்தது. வலுவான ஆதாரங்கள் சிபிஐயிடம் இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில்,  சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், மனுவை இன்று தள்ளுபடி செய்தது. மேல்முறையீட்டுக்கான காலம் கடந்துவிட்டதால் விசாரிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.

இதேபோல் பாஜக மூத்த தலைவர் அஜய் அகர்வாலும் கடந்த ஆண்டு மேல்முறையீடு செய்தார். அவரது மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டு, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. #BoforsCase #CBIAppeal #SupremeCourt
Tags:    

Similar News