செய்திகள்
நவம்பர் 30 முதல் குறைந்த கட்டணத்தில் பின்னிரவு சிறப்பு விமானச் சேவை - ஏர் இந்தியா அறிவிப்பு
‘ரெட் ஐ’ என்னும் பின்னிரவுநேர விமானச் சேவையை நவம்பர் 30 முதல் உள்நாட்டில் தொடங்கவுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. #AirIndia #RedEyedomesticflights
பெங்களூரு:
இந்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் நாட்டில் உள்ள அத்தனை வழித்தடங்களிலும் உள்நாட்டு விமானச் சேவைகளை இயக்கி வருகிறது.
இந்த வழித்தடங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளதால் கூடுதலாக பின்னிரவு சேவைகளை தொடர தீர்மானிக்கப்பட்டது. இந்த சேவைக்கு ‘ரெட் ஐ’ என பெயரிடப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக டெல்லி-கோவா-டெல்லி, டெல்லி-கோயமுத்தூர்-டெல்லி, பெங்களூரு-அகமதாபாத்-பெங்களூரு ஆகிய வழித்தடங்களில் நவம்பர் 30-ம் தேதி முதல் இந்த பின்னிரவு விமானச் சேவைகள் தொடங்குகின்றன.
டெல்லியில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்படும் விமானம் பின்னிரவு 12.35 மணியளவில் கோவா சென்றடையும். அங்கிருந்து 1.15 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3.40 மணியளவில் டெல்லி வந்து சேரும்.
டெல்லியில் இருந்து இரவு 9.15 மணிக்கு புறப்படும் விமானம் பின்னிரவு 12.30 மணியளவில் கோயமுத்தூர் சென்றடையும். அங்கிருந்து 1.00 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4.00 மணியளவில் டெல்லி வந்து சேரும்.
இதேபோல், பெங்களூருவில் இருந்து பின்னிரவு 12.30 மணிக்கு புறப்படும் விமானம் 2.35 மணியளவில் அகமதாபாத் சென்றடையும். அங்கிருந்து அதிகாலை 3.05 மணிக்கு புறப்பட்டு 5.25 மணியளவில் பெங்களூரு வந்து சேரும்.
இந்த விமானச் சேவைகளின் மூலம் சராசரி கட்டணங்களைவிட குறைந்த செலவில் செல்லலாம். பெருநகர சாலைகளில் பரபரப்பான நேரங்களின்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலையும், ஓட்டல்களில் தங்கும் செலவினங்களையும் தவிர்க்கலாம் என ஏர் இந்தியா இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #AirIndia #RedEyedomesticflights