செய்திகள்

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள இளவரசிக்கு 15 நாள் பரோல்

Published On 2018-10-25 09:33 GMT   |   Update On 2018-10-25 09:38 GMT
சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு சிறையில் உள்ள இளவரசிக்கு 15 நாள் பரோல் அளிக்கப்பட்டுள்ளது. #Ilavarasi
பெங்களூரு:

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சசிகலா 2 முறை பரோல் மூலம் சென்னை சென்று வந்தார்.

ஆனால் இளவரசி சிறைக்கு சென்ற பிறகு இதுவரை பரோல் கேட்கவில்லை. இதற்கிடையே சிறையில் விதிமுறைகளை மீறி சசிகலா, இளவரசிக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன. இதில் லஞ்சம் கைமாறப்பட்டதாக எழுந்த புகாரை கர்நாடக ஊழல் தடுப்பு படை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.



இந்த நிலையில் தனது சகோதரரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதால், அவரை பார்க்க பரோல் வழங்க கோரி சிறை நிர்வாகத்திடம் இளவரசி மனு அளித்து இருந்தார்.

இந்நிலையில், கர்நாடக சிறைத்துறை இளவரசிக்கு பரோல் வழங்க அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, இன்று மாலை சிறையில் இருந்து இளவரசி வெளியே வருவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவோ, ஊடகங்களை சந்திக்கவோ கூடாது போன்ற நிபந்தனைகளுடன் இளவரசிக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் 8-ம் தேதி மாலை 6 மணிக்குள் மீண்டும் சிறைக்கு திரும்புமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டு 21 மாதங்கள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. #Ilavarasi
Tags:    

Similar News