செய்திகள்

பத்திரிகையாளர் பிரியா ரமணி மீது அவதூறு வழக்கு- எம்.ஜே.அக்பர் 31ம் தேதி ஆஜராக உத்தரவு

Published On 2018-10-18 09:29 GMT   |   Update On 2018-10-18 09:29 GMT
பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணிக்கு எதிராக முன்னாள் மத்திய மந்திரி எம்.ஜே.அக்பர் தொடர்ந்த வழக்கை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. #MJAkbar #MeToo #JournalistPriyaRamani
புதுடெல்லி:

பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பான தகவல்களை “மீ டூ” என்ற பெயரில் டுவிட்டர் இணைய தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அவ்வகையில், மத்திய மந்திரி எம்.ஜே.அக்பர் மீது பிரியாரமணி, கசாலா வகாப், ஷிமா ரகா, அஞ்சுபாரதி உள்ளிட்ட பிரபல பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்களை தெரிவித்தனர். இதையடுத்து எழுந்த கடும் விமர்சனங்களைத் தொடர்ந்து மந்திரி பதவியை  ராஜினாமா செய்தார் அக்பர்.

அதேசமயம், தன்மீது பாலியல் புகாரை முதலில் கூறிய பிரியா ரமணி என்ற பெண் பத்திரிகையாளர் மீது எம்.ஜே.அக்பர் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். டெல்லி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் கிரிமினல் இதற்கான மனுவை அளித்தார்.

“பிரியா ரமணி வேண்டுமென்றே தீய நோக்கத்துடனும், உள்நோக்கத்துடனும் புகார் கூறியுள்ளார். அவர் மீது உரிய அவதூறு சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, எம்.ஜே.அக்பர் தரப்பு வாதத்தைக் கேட்ட நீதிமன்றம், அவதூறு வழக்கை விசாரணைக்கு ஏற்றது. அத்துடன் விசாரணை 31-ம் தேதி தொடங்கும் என்றும் தெரிவித்தது.

31-ம்தேதி எம்.ஜே.அக்பர் மற்றும் பிற சாட்சியங்கள் நேரில் ஆஜராகி தங்கள் சாட்சியம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

‘பத்திரிகையாளர் பிரியா ரமணியின் பாலியல் புகார் தொடர்பான டுவிட்டர் பதிவால் நான் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். பிரியா ரமணி சொல்வது போன்ற எந்த தவறையும் நான் செய்யவில்லை. என் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டதால் பதவி விலகினேன்’ என எம்.ஜே.அக்பர் கூறினார். #MJAkbar #MeToo #JournalistPriyaRamani
Tags:    

Similar News