திருப்பதி அருகே துப்பாக்கியுடன் செம்மரக் கும்பல் 4 பேர் கைது
திருப்பதி:
திருப்பதி அடுத்த ரேணிகுண்டா கடப்பா தேசிய நெடுஞ்சாலையையொட்டி மாமண்டூர் வனப்பகுதி உள்ளது.
இந்த வனப்பகுதியில் ஏராளமான செம்மரங்கள் உள்ளன. திருப்பதி வன அலுவலர் சுப்பராயுடு, மாமண்டூர் வன அலுவலர் நாராயணா தலைமையில் மாமண்டூர் வனப்பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது வனபகுதியில் 4 பேர் கொண்டகும்பல் செம்மரங்களை வெட்டி காரில் ஏற்றிக் கொண்டிருந்தனர். இதனை கண்ட வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 2 நாட்டு துப்பாக்கிகள் 15 செம்மர கட்டைகளை பறிமுதல் செய்து வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். திருப்பதி அடுத்த கோடூர் மண்டலம் மாதவரம் பகுதியை சேர்ந்த முரளி (வயது 20). மாமண்டூரை சேர்ந்த ரமேஷ்குமார் ரெட்டி (24), மாமண்டூர் எஸ்.வி.நகரை சேர்ந்த புருஷோத்தம் (24), அயிராலா மண்டலம் அக்காளிபல்லி சசிகுமார் (20) என தெரியவந்தது.
4 பேரையும் கைது செய்த வனத்துறையினர் அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். #RedSandersSmuggling