செய்திகள்

வங்கி மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி நிரவ் மோடியின் ரூ.637 கோடி சொத்துக்கள் முடக்கம்

Published On 2018-10-01 06:34 GMT   |   Update On 2018-10-01 07:50 GMT
வங்கி மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் அவருடைய குடும்பத்திற்கு சொந்தமான ரூ.637 மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. #NiravModi
புதுடெல்லி:

குஜராத் மாநிலத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி மும்பையை தலைமை இடமாக கொண்டு நகை கடைகள் நடத்தி வந்தார்.

நகை வடிவமைப்பு மற்றும் வைர வியாபாரத்தில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் அவர் முதன்மை பெற்று இருந்தார்.

வைர வியாபாரத்தை விருத்தி செய்வதற்காக அவர் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் 280 கோடி ரூபாய் கடன் வாங்கினார். பிறகு அந்த தொகை அதிகரித்தது. மேலும் சில வங்கிகளிலும் கடன் பெற்றார்.

ஆனால் கடன் தொகையை அவர் குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பி செலுத்தவில்லை. சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாயை அவர் வங்கிகளுக்கு திருப்பி செலுத்த வேண்டி இருந்தது. அவர் கடனை திருப்பி தராததால் வங்கிகள் அவர் மீது புகார் கூறின.

இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் நிரவ் மோடி மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரித்தது. அமலாக்கத்துறை அதிகாரிகளும் பணப்பரிமாற்ற மோசடிக்குறித்து விசாரித்தனர்.

இந்த நிலையில் நிரவ் மோடி கடந்த ஏப்ரல் மாதம் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டார். அவர் ஆங்காங்கில் பதுங்கி இருப்பதாக கூறப்பட்டது. கடந்த ஜூன் மாதம் அவர் இங்கிலாந்தில் இருப்பது தெரிய வந்தது.

தொழில் அதிபர் நிரவ் மோடி வங்கிகளில் பெற்ற கடனை திருப்பி செலுத்த வேறு எந்த முயற்சியும் எடுக்காததால் அவரது சொத்துக்களை முடக்கும் நடவடிக்கைகளை அமலாக்கத்துறை மேற்கொண்டது. முதலில் குஜராத்தில் உள்ள அவரது 4 மில்கள் முடக்கப்பட்டன.

பிறகு மும்பையில் அவருக்கு சொந்தமான ரூ.900 கோடி மதிப்புள்ள பங்களா முடக்கப்பட்டது. இதை தொடர்ந்து நிரவ் மோடியின் 523 கோடி ரூபாய் மதிப்புள்ள ரியல் எஸ்டேட் சொத்துக்களும் முடக்கப்பட்டன.



இந்த நிலையில் தற்போது நிரவ் மோடி மற்றும் அவருடைய குடும்பத்திற்கு சொந்தமான ரூ.637 மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக இன்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் நியூயார்க் நகரில் நிரவ் மோடிக்கு சொந்தமாக 2 அசையா சொத்துக்கள் உள்ளன. ரூ.216 கோடி மதிப்புள்ள அந்த சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டு வங்கிகளில் 5 கணக்குகளை நிரவ் மோடி வைத்துள்ளார். அந்த கணக்குகளில் ரூ.278 கோடி முதலீடு செய்யப்பட்டு இருந்தது. அந்த பணம் முடக்கப்பட்டுள்ளது. அது போல ஆங்காங்கில் உள்ள வங்கியில் இருப்பு வைக்கப்பட்டிருந்த ரூ.22.69 கோடி மதிப்புள்ள தங்க-வைர நகைகள் முடக்கப்பட்டுள்ளன.

நிரவ் மோடியை கைது செய்வதற்கு சர்வதேச போலீஸ் உதவியை இந்தியா நாடியுள்ளது. அவரது சொத்துக்களில் 90 சதவீதம் முடக்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. #NiravModi
Tags:    

Similar News