செய்திகள்
சபரிமலை தீர்ப்பு விவகாரம் - கேரள முழுஅடைப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றது சிவசேனா
சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை கண்டித்து சிவசேனா முழுஅடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. #Sabarimala #ShivSena
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் அறிவிப்புக்கு ஒரு தரப்பினர் ஆதரவும், மற்றொரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சபரிமலை தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை கண்டித்து இன்று (1-ந் தேதி) கேரள மாநிலம் முழுவதும் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக சிவசேனா அறிவித்திருந்தது.
இந்த நிலையில், கேரளாவில் 7 மாவட்டங்களில் இன்று புயல் காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பதால், தங்களது முழு அடைப்பு போராட்டத்தை வாபஸ் பெறுவதாக சிவசேனா கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து மாநில நிர்வாகிகள் கூறுகையில், முழு அடைப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றாலும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்தனர். #Sabarimala #ShivSena #SupremeCourt