செய்திகள்

முத்தலாக் அவசர சட்டத்திற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி ஐகோர்ட்

Published On 2018-09-28 09:28 GMT   |   Update On 2018-09-28 09:28 GMT
முத்தலாக் தடை அவசர சட்டத்திற்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #DelhiHC #TripleTalaq
புதுடெல்லி:

முத்தலாக் விவாகரத்து முறை அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அறிவித்தது.  இதையடுத்து முத்தலாக் முறையை தடை செய்யும் முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய அரசு உருவாக்கி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது. மக்களவையில் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டாலும், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு மற்றும் பாஜகவுக்கு போதிய பலமின்மை காரணமாக மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது.

எனவே, முத்தலாக் தடை அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை கடந்த 19-ம் தேதி ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்தச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்ததையடுத்து, சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இந்த அவசர சட்டத்தை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சாகித் ஆசாத் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி காமேஷ்வர் ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.



முத்தலாக் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்று ஒருமுறை உச்ச நீதிமன்றம் கூறிவிட்டதால், அந்த விஷயத்தில் மத்திய அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.  #DelhiHC #TripleTalaq
Tags:    

Similar News