செய்திகள்

வாடிகன் அரண்மனை வரை சென்ற கேரள கன்னியாஸ்திரி விவகாரம்

Published On 2018-09-15 10:04 GMT   |   Update On 2018-09-15 10:04 GMT
ஜலந்தர் ஆயர் மீது பாலியல் புகார் அளித்த கேரள மாநில கன்னியாஸ்திரி விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக இந்தியாவை சேர்ந்த பிரதிநிதி வாடிகன் அரண்மனை சென்றுள்ளார். #KeralaNun #BishopFranco #Vaticanpalace
வாடிகன் சிட்டி:

கேரள மாநிலம் கோட்டயம், குருவிலங்காடு கன்னியர் மடத்தில் தங்கியிருந்த கன்னியாஸ்திரி ஒருவருக்கு ஜலந்தர் மறை மாவட்ட ஆயர் பிராங்கோ முல்லக்கல் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
 
இப்புகார் தொடர்பாக கோட்டயம் போலீசார் ஜலந்தர் சென்று ஆயர் பிராங்கோ முல்லக்கல்லிடம் விசாரணை நடத்தினர். மேலும் வருகிற 19-ந்தேதி அவர், கோட்டயம் போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பினர்.

இதற்கிடையே கன்னியாஸ்திரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆயர் பிராங்கோ முல்லக்கல்லை கைது செய்யக்கோரி கொச்சியில் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர். நாடு முழுவதும் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமையகமான வாடிகன் தலையிட வேண்டுமென்றும் கோரிக்கைகள் எழுந்தது.

கேரளாவில் இருந்து ஏராளமானோர் இதுதொடர்பாக வாடிகன் அரண்மனைக்கு  புகார்கள் அனுப்பியதாக தெரிகிறது. இதைதொடர்ந்து, வாடிகன் அரண்மனைக்கான இந்தியாவின் சிறப்பு பிரதிநிதி தற்போது வாடிகன் நகருக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



இதற்கிடையில், பிராங்கோ முல்லக்கல்லை கைது செய்ய வலியுறுத்தி கிறிஸ்தவ கூட்டுசபையை சேர்ந்த ஸ்டீபன் மேத்யூ நடத்திவரும் காலவரையற்ற உண்ணாவிரதம் இன்று எட்டாவது நாளை எட்டியுள்ளது. அவருக்கு ஆதரவாக கத்தோலிக்க சீரமைப்பு இயக்கத்தை சேர்ந்த அலோஷி ஜோசப் என்பவரும் இன்று உண்ணாவிரதத்தில் குதித்துள்ளார்.

இந்நிலையில், கேரள கன்னியாஸ்திரி விவகாரம் தொடர்பாக வாடிகன் அரண்மனை விசாரித்து வருவதாக வெளியான தகவலை பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் இன்று மறுத்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ‘இப்படிப்பட்ட செய்திகள் பொய்யாக இருக்கலாம். கேரளாவிலும் உலகின் பல பகுதிகளிலும் நடைபெறும் போராட்டங்களை நீர்த்துப்போக செய்வதற்காக இப்பட்டிப்பட்ட புரளிகளை பிராங்கோ முல்லக்கல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பரப்பலாம்.

வாடிகன் அரண்மனை மூலம் நடவடிக்கை எடுக்க நினைத்தால் ஒரேநாளில் போப்பின் கவனத்துக்கு கொண்டு சென்று எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு உடனடியாக கடிதம் அனுப்பி வைக்கப்படும்’ என குறிப்பிட்டுள்ளார். #KeralaNun  #BishopFranco #Vaticanpalace
Tags:    

Similar News