செய்திகள்
கன்னியாஸ்திரியை அவதூறாக பேசியதற்காக வருத்தம் தெரிவித்தார் கேரள எம்எல்ஏ ஜார்ஜ்
பிஷப் மீது பாலியல் புகார் கூறிய கன்னியாஸ்திரியை மோசமாக விமர்சித்ததற்காக கேரள சுயேட்சை எம்எல்ஏ ஜார்ஜ் வருத்தம் தெரிவித்துள்ளார். #KeralaNun #PCGeorge
திருவனந்தபுரம்:
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தரில் பிஷப்பாக இருக்கும் பிராங்கோ முல்லக்கல் என்பவர் தன்னை 2014 முதல் 2016 வரை கேரளாவில் உள்ள ஒரு கான்வெண்டில் வைத்து தனது ஒப்புதலின்றி 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார்.
அதன் பேரில் ஜலந்தர் சென்ற திருவனந்தபுரம் போலீசார், பிஷப் பிராங்கோ முல்லக்கல்லிடம் விசாரித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஜலந்தர் பிஷப் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில், பிஷப்புக்கு ஆதரவாக பேசிய சுயேட்சை எம்.எல்.ஏ, பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியை விபச்சாரி என மோசமாக விமர்சித்தார்.
இதற்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்தன. நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் ஜார்ஜ்க்கு சம்மன் அனுப்பியது. இந்நிலையில், தான் உணர்ச்சி வசப்பட்டு அப்படி கூறி விட்டதாக ஜார்ஜ் இன்று தெரிவித்துள்ளார்.
“என்னை பொறுத்த வரை அவர் கன்னியாஸ்திரியே இல்லை. எனினும், நான் அத்தகைய வார்த்தையை பயன்படுத்தி இருக்க கூடாது’ என ஜார்ஜ் இன்று கூறியுள்ளார்.
இதற்கிடையே, பிஷப் பிராங்கோ வரும் 18-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என கேரள போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.