செய்திகள்
ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி அயோத்தி நோக்கி பாதயாத்திரை - பிரவீன் தொகாடியா
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட தவறிவிட்ட மத்திய அரசுக்கு எதிராக லக்னோவில் இருந்து அக்டோபர் 21-ம் தேதி முதல் பாதயாத்திரை தொடங்குவதாக பிரவீன் தொகாடியா தெரிவித்துள்ளார். #ChaloAyodhya #praveenTogadia
ஐதராபாத்:
விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரவீன் தொகாடியா அந்தர்ராஷ்டிரிய ஹிந்து பரிஷத் என்னும் புதிய அமைப்பை தொடங்கி அந்த அமைப்பின் தலைவராக பொறுப்பேற்று வருகிறார்.
இந்நிலையில், தெலுங்கானா மாநில தலைநகரான ஐதராபாத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரவீன் தொகாடியா, 2014-பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது அயோத்தியில் ராமர் கோயிலை கட்டுவோம் என மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் மத்தியில் ஆளும் பா.ஜ.க. தாமதப்படுத்தி வருவதாக குற்றம்சாட்டினார்.
பாராளுமன்றத்தில் முத்தலாக் முறையை தடுக்க சட்டம் இயற்றிய அரசு, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக ஏன் சட்டம் இயற்றவில்லை? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
அயோத்தியில் ராமர் கோயிலை விரைவாக கட்ட வேண்டும் என வலியுறுத்தி உத்தரப்பிரதேசம் மாநில தலைநகரான லக்னோ நகரில் இருந்து அக்டோபர் மாதம் 21-ம் தேதி அயோத்தி நோக்கி நடைப்பயணம் செல்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். #ChaloAyodhya #praveenTogadia