செய்திகள்

கேரளாவில் கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கொன்ற தாய்

Published On 2018-09-03 06:44 GMT   |   Update On 2018-09-03 06:44 GMT
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே கள்ளக்காதல் மூலம் பிறந்த குழந்தையை கழுத்தை நெரித்து கொடூரமான முறையில் கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள பாறமுக்கு காலனி பகுதியை சேர்ந்தவர் ரின்ஷா (வயது 24).

இவருக்கு திருமணமாகி விட்டது. கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக அவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்தார். இவர் அக்கம், பக்கத்தினரிடம் அதிகமாக பேசி பழகாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தார்.

இந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து குழந்தையின் அழு குரல் கேட்டது. பிறகு சிறிது நேரத்தில் அது ஓய்ந்து விட்டது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தினர் ரின்ஷாவின் வீட்டிற்கு சென்று பார்த்தனர். அங்கு அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு குழந்தை இறந்து கிடந்தது. கையில் இருந்து ரத்தம் வடிந்த நிலையில் ரின்ஷா உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார்.

இதுபற்றி போலீசுக்கு பொது மக்கள் தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு சென்று அந்த பெண்ணை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் வீட்டில் இறந்து கிடந்த குழந்தையின் பிணம் கைப்பற்றப்பட்டு கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அந்த குழந்தை ரின்ஷாவுக்கு பிறந்தது என்பதும், குழந்தை பிறந்த உடனேயே அது கழுத்தை நெரித்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதும் பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.

இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது கணவரை பிரிந்து தனியாக வசித்துவந்த ரின்ஷாவுக்கும் ஒரு வாலிபருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டு அதன்மூலம் அவர் கர்ப்பம் அடைந்தது தெரிய வந்தது. இதனால் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்த ரின்ஷாவுக்கு வீட்டிலேயே குழந்தை பிறந்ததும் அதை மறைப்பதற்காக பெற்ற குழந்தையையே கழுத்தை நெரித்து கொன்று விட்டு கையை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது.

தற்போது ரின்ஷா தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதால் அவருக்கு சிகிச்சை முடிந்த பிறகுதான் அவரது கள்ளக்காதலன் யார்? என்பது பற்றி தெரிய வரும். ரின்ஷா மீது கொலை மற்றும் தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்து உள்ளனர். மேலும் அவர் சிகிச்சை பெறும் வார்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #tamilnews
Tags:    

Similar News