செய்திகள்

காஷ்மீர் பிரிவினைவாதி சையத் சலாஹுதீன் மகனுக்கு 10 நாள் விசாரணை காவல்

Published On 2018-08-31 18:04 IST   |   Update On 2018-08-31 18:04:00 IST
காஷ்மீரில் கைது செய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் பிரிவினவாத அமைப்பின் தலைவர் சையத் சலாஹுதீன் மகனை 10 நாள் காவலில் வைத்து விசாரிக்க டெல்லி கோர்ட் அனுமதியளித்தது. #SyedSalahuddin #SyedAhmedShakeel
புதுடெல்லி:

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் வன்முறைகளில் ஈடுபட்டு வரும் பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி வருவதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், ஸ்ரீநகரில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று காலை அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் ஹிஸ்புல் முஜாகிதீன் என்ற பிரிவினைவாத அமைப்பு தலைவன் சையத் சலாஹுதீனின் இரண்டாவது மகன் சையத் ஷகீல் அகமது(48) என்பவரை அதிகாரிகள் கைது செய்தனர். 

காஷ்மீரில் இருந்து டெல்லிக்கு அழைத்து வரப்பட்ட சையத் ஷகீல் அகமதுவை அதிகாரிகள் இன்று டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
 
அவரிடம் மேற்கொண்டு விசாரிக்க வேண்டியுள்ளதால் தேசிய புலனாய்வு அதிகாரிகளின் விசாரணை காவலுக்கு ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி அவரை செப்டம்பர் பத்தாம் தேதிவரை காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி அளித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சையத் ஷகீல் அகமது காஷ்மீர் மருத்துவ அறிவியல் மையத்தில் மூத்த ஆய்வக தொழில்நுட்ப அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். சையத் சலாஹூதீனின் மற்றொரு மகன் சையத் ஷாகீத்தை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஏற்கனவே கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. #SyedSalahuddin #SyedAhmedShakeel #HizbulMujahideen 
Tags:    

Similar News